'மாநகரம் 2'-ல் நடிக்க விரும்பும் சந்தீப் கிஷன்


மாநகரம் 2-ல் நடிக்க விரும்பும் சந்தீப் கிஷன்
x

மாநகரம் 2-ம் பாகம் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என சந்தீப் கிஷன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழில் யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சந்தீப் கிஷன் தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் 'மைக்கேல்' என்ற படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகி உள்ளது. இதில் விஜய்சேதுபதி, கவுதம் மேனன், திவ்யான்ஷா, வரலட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரஞ்சித் ஜெயக்கொடி டைரக்டு செய்துள்ளார்.

சந்தீப் கிஷன் அளித்துள்ள பேட்டியில், "நான் டைரக்டர் கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி நடிகரானேன். வாய்ப்பு தேடிய ஆரம்ப காலத்தில் தெலுங்கு, இந்தியில் நடித்த படங்கள் வெற்றி பெற்றன. தொடர்ந்து தெலுங்கில் அதிக படங்கள் வந்தன. என்னை வைத்து 'மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் பெரிய டைரக்டராக மாறி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

மாநகரம் 2-ம் பாகம் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். மைக்கேல் படத்தில் விஜய்சேதுபதி விடுமுறை நாட்களிலும் வந்து நடித்து கொடுத்தார். ஒரு பெண்ணுக்காக நடக்கும் அதிரடி சண்டை படம் மைக்கேல். சண்டை காட்சியில் நடித்தபோது எனக்கு காயங்கள் ஏற்பட்டன. சண்டை கலைஞர்களுக்கும் அடிபட்டது. படம் நன்றாக வந்துள்ளது. இந்த படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மைக்கேல் 2-ம் பாகம் எடுப்பது பற்றி யோசிப்போம்'' என்றார்.


Next Story