குழந்தைக்கு தந்தையாக விருப்பம்; 50 வயது பிரபல நடிகரின் சிறப்பு பேட்டி


குழந்தைக்கு தந்தையாக விருப்பம்; 50 வயது பிரபல நடிகரின் சிறப்பு பேட்டி
x

எனது குழந்தையின் உண்மையான தாய், எனது மனைவியாகவும் இருப்பார் என பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

புனே,

நடிகர் சல்மான் கான் குழந்தைகள் மீது அன்பு கொண்டவர். தனது மருமகன்கள் மற்றும் மருமகள்களுடன் நேரம் செலவிடுவதில் விருப்பம் உள்ளவர். எனினும், 50 வயது கடந்தும் இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். அது ஏன்? என்பதே ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

ஆனால், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் அதற்கு விடை தரும் வகையில் பதிலளித்து உள்ளார். ரஜத் சர்மா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சல்மான் கான், திருமண திட்டங்கள், தந்தையாவது மற்றும் குழந்தைக்கான திட்டங்கள் உள்ளிட்டவை பற்றி விரிவாக பேசியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர், என்னவென்று கூறுவது. திட்டம் ஒன்று உள்ளது. ஆனால், வீட்டுக்கு மருமகள் வரவேண்டும் என்பதற்காக அது இல்லை. ஒரு குழந்தை வரவேண்டும் என்பதற்கான திட்டமது. ஆனால், இந்திய சட்டங்களின்படி அது சாத்தியம் இல்லை. அதனால், என்ன செய்ய வேண்டும் என நாங்கள் பார்க்க இருக்கிறோம் என கூறியுள்ளார்.

பாலிவுட்டில் கரண் ஜோகர், துஷார் கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள், நடிகர்கள் என துணையில்லாமல் தந்தைகளாக உள்ளனர். ஒற்றை பெற்றோராக இருந்தபடி அவர்கள் குழந்தைகளை வளர்த்து வருகிறார்கள். இதேபோன்று நடிகை சுஷ்மிதா சென் உள்பட பாலிவுட் நடிகைகள் ஒற்றை பெற்றோராக குழந்தை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

2 குழந்தைகளுக்கு கரண் தந்தையாக இருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த சல்மான் கான், அதற்கான முயற்சியிலேயே நான் ஈடுபட்டேன். ஆனால், அந்த சட்டம் மாற்றப்பட்டு விட்டது. அது தனது திட்டத்திற்கு தடையாக அமைந்து விட்டது. அதனால் பொறுத்திருந்து பார்ப்போம் என கூறியுள்ளார்.

குழந்தைகள் என்றால் எனக்கு கொள்ளை பிரியம். ஆனால், குழந்தைகள் வரும்போது, பின்னர் அவர்களது தாயார்களும் கூட வருவார்கள்.

அவர்களுக்கு ஒரு தாய் இருப்பது நல்லதுதான். ஆனால், வீட்டில் எங்களிடம் நிறைய தாய்மார்கள் உள்ளனர். ஒட்டுமொத்த மாவட்டமும் எங்களிடம் உள்ளது. ஒட்டுமொத்த கிராமமும் எங்களிடம் இருக்கிறது.

அவர்கள் குழந்தைகளை கவனித்து கொள்வார்கள். ஆனால், எனது குழந்தையின் உண்மையான தாய், எனது மனைவியாகவும் இருப்பார் என நடிகர் சல்மான் கான் அந்த பேட்டியில் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டியால், திருமணத்திற்கு அவர் தயாராகி வருகிறாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழாமல் இல்லை.

நடிகர் சல்மான் கான் நடித்த கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்ற திரைப்படம் 2 நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியானது. காமெடி, அதிரடி காட்சிகள் என பல விசயங்கள் இந்த படத்தில் நிறைந்து உள்ளன.

சல்மான் கானுடன் படத்தில், பூஜா ஹெக்டே, வெங்கடேஷ், ஜெகபதி பாபு, ராகவ் ஜூயல், சித்தார்த் நிகம், ஷெனாஸ் கில், ஜஸ்ஸி கில் மற்றும் பலக் திவாரி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்து உள்ளனர்.


Next Story