கரு கலைந்த ஒரு சில மணிநேரத்தில்... படப்பிடிப்புக்கு வர அழைப்பு; மத்திய மந்திரி இரானியின் அதிர்ச்சி பேட்டி


கரு கலைந்த ஒரு சில மணிநேரத்தில்... படப்பிடிப்புக்கு வர அழைப்பு; மத்திய மந்திரி இரானியின் அதிர்ச்சி பேட்டி
x

ராமாயணத்தில் சீதையாக நடித்தபோது, தன் வாழ்வில் ஏற்பட்ட சோக நிகழ்வுகளை மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.


புதுடெல்லி,


தொலைக்காட்சியில் ராமாயணம் புராண தொடர் மக்களிடையே வரவேற்பு பெற்றிருந்த காலகட்டத்தில், அதில் தற்போது மத்திய மந்திரியாக உள்ள ஸ்மிரிதி இரானி சீதை வேடம் ஏற்று நடித்திருந்து உள்ளார்.

அப்போது தனக்கு ஏற்பட்ட அசவுகரியங்கள், சோகங்கள் மற்றும் நெருக்கடியான தருணங்களை அவர் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். ரவி சோப்ரா இயக்கத்தில் அந்த தொடர் வெளிவந்து கொண்டிருந்தது.

அப்போது, இரானி அந்த தொடருடன் சேர்த்து பிரபல தயாரிப்பாளரான ஏக்தா கபூர் தயாரிப்பில் வெளியான, கியூன்கி சாஸ் பி கபி பஹூ தி என்ற மற்றொரு இந்தி தொடரிலும் 2 ஷிப்ட் போட்டு நடித்து வந்து உள்ளார். இதன்படி, காலையில் ராமாயண தொடருக்கும், நண்பகலுக்கு பின்னர் இந்தி தொடருக்கான படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார்.




இந்த சூழலில் ராமாயண படப்பிடிப்பின்போது, தனக்கு கரு கலைந்தது பற்றியும், அப்போது மனிதநேயம் என்றால் என்ன என்பது பற்றி பாடம் கற்று கொண்டேன் என இரானி வேதனை தெரிவித்து உள்ளார்.

கியூன்கி சாஸ் பி கபி பஹூ தி தொடரில் தான் நடிக்காவிட்டாலும், படம்பிடிப்பதற்கு 50-க்கும் மேற்பட்ட வேடங்கள் இருந்தன. ஆனால், ராமாயணத்தில் சீதைக்கு பதிலாக வேறு ஒருவர் நடிக்க முடியாது.

இந்த சூழலில், கியூன்கி சாஸ் பி கபி பஹூ தி தொடரில் நடித்தபோது, தனக்கு உடல்நிலை சரியில்லை. வீட்டுக்கு போக வேண்டும் என அனுமதி கேட்டேன்.




ஆனல், தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றேன். அவர்கள் படப்பிடிப்பு முடிந்து என்னை விடும்போது, அப்போதே மாலையாகி விட்டிருந்தது. அப்போது கர்ப்பிணியாக இருந்தேன் என்ற விவரம் கூட எனக்கு தெரியவில்லை.

போகும் வழியில் ரத்த கசிவு ஏற்பட்டது. மழையும் நன்றாக பெய்து கொண்டிருந்தது. ஆட்டோ ஒன்றை நிறுத்தி மருத்துவமனைக்கு போகும்படி கூறினேன்.

அப்போது, வாசலில் ஓடி வந்த நர்ஸ் ஒருவர் என்னிடம் ஆட்டோகிராப் வேண்டும் என கேட்டார். ரத்தம் வழிந்த நிலையில், அவருக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்தேன். கரு கலைகிறது என்ற நினைப்பில், மருத்துவமனையில் சேரவேண்டும் என்று அவரிடம் கூறினேன்.

அன்றைய தினம், கியூன்கி சாஸ் பி கபி பஹூ தி தொடரில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நாளை நடிக்க வரவேண்டும் என தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டது.

அதற்கு அவர்களிடம், உடல்நலம் இல்லாத சூழலை முன்பே கூறியிருந்தேனே என கூறி, கரு கலைந்து போன விவரங்களை கூறினேன். ஆனால் அவர்களோ, அதனால் ஒன்றும் இல்லை. மதியம் 2 மணி ஷிப்டுக்கு வாருங்கள் என பதிலளித்தனர்.

இதுபற்றி ராமாயண தொடரின் இயக்குனர் ரவி சோப்ராவிடம் நான் பேசினேன். காலை 7 மணி ஷிப்டுக்கு பதிலாக 8 மணிக்கு வரவா? என கேட்டேன். ஆனால் அவரோ, என்னிடம், நீ என்ன முட்டாளா? ஒரு குழந்தையை இழப்பது எவ்வளவு இழப்பு என தெரியுமா? நீ அதனை கடந்து இருக்கிறாய்.

நாளை வரவேண்டாம் என கூறினார். அதற்கு நான், ஞாயிற்று கிழமை நிகழ்ச்சி வருகிறது. நான் இல்லாமல் நீங்கள் படப்பிடிப்பு நடத்த முடியாது இல்லையா? என்ற வகையில் கூறினேன். அதற்கு சோப்ரா, நான் பார்த்து கொள்கிறேன் என கூறினார்.

தொடர்ந்து சோப்ராவிடம், ஏக்தா கபூரின் தொடரில் நடிக்க வேண்டியிருந்தது பற்றி கூறினேன். அதில் நடிக்க போக போகிறேன். நாளை 2 மணி ஷிப்டுக்கு போகாவிட்டால் என்னை அவர்கள் நீக்கி விடுவார்கள் என்று கூறினேன்.

அதற்கு அவர், அதுபற்றி எனக்கு தெரியாது. எனது படப்பிடிப்புக்கு வரவேண்டாம். 2 மணிக்கு நாளை போக வேண்டுமெனில், எனது ஷிப்டை தூங்க பயன்படுத்தி கொள் என என்னிடம் அவர் கூறினார்.

அடுத்த நாள் ஏக்தா கபூர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். இதனால், சக நடிகர் ஒருவர் ஏக்தாவிடம், கரு கலைந்து விட்டது என நான் கூறியதில் உண்மையில்லை என காதில் கிசுகிசுவென கூறினார்.

எனது வீட்டுக்கு தவணை செலுத்த வேண்டும் என்பதற்காக நான் வந்துள்ளேன் என்பது பற்றி அந்த நபருக்கு தெரியவில்லை. அதற்கு அடுத்த நாள், எனது மருத்துவ அறிக்கை எல்லாவற்றையும் தூக்கி கொண்டு ஏக்தாவிடம் சென்றேன். அது நாடகம் இல்லை என கூறுவதற்காக.

அதனால், அசவுகரியமடைந்த அவர், என்னிடம் அதெல்லாம் காட்ட வேண்டாம் என கூறினார். வேண்டுமென்றால், கலைந்த கருவை கூட உங்களுக்கு காட்டியிருப்பேன். அது என்னிடம் இருந்திருந்தால் என இரானி கூறியுள்ளார்.

7 ஆண்டுகளாக இந்த தொடரில் நடித்த இரானி பின்னர் 2007-ம் ஆண்டில் அதில் இருந்து விலகினார். ஏக்தா கபூருடன் மோதல் என வதந்தி பரவியது. ஆனால் அதன்பின்னர் இருவருக்கும் சமரசம் ஏற்பட்டது.

இந்த பேட்டியில், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடியான தருணத்தில் ஒருவர் முன்வந்து உதவியாக இருந்த நிகழ்வையும், மற்றொரு நிகழ்வில் தனக்கு ஏற்பட்ட அசவுகரியம் பற்றியும் வேதனையுடன் இரானி பகிர்ந்து உள்ளார்.


Next Story