சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை மத்திய அரசு பறிப்பதா? - கார்கே கண்டனம்


சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை மத்திய அரசு பறிப்பதா? - கார்கே கண்டனம்
x

8-ம் வகுப்பு வரையில் படிக்கிற மாணவர்களின் கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் படிக்கிற சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தி உள்ளது. இதையொட்டி பிறப்பித்த அறிவிக்கையில், "1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் இலவச, கட்டாய கல்வி அளிப்பது அரசின் கடமை. எனவே 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மாணவர்கள்தான் இனி மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் மற்றும் பழங்குடியினர் அமைச்சகத்தின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் வருவார்கள்" என கூறப்பட்டுள்ளது.

இந்த முடிவை எதிர்க்கட்சிகள் சாடுகின்றன.

இதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக சாடி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி அவர்களே, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் படிக்கிற தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை உங்கள் அரசு நிறுத்தி இருக்கிறது.

ஏழை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை பறித்ததால் என்ன பலன்? ஏழை மாணவர்களுக்கான இந்த கல்வி உதவித்தொகையை பறிப்பதன் மூலம் உங்கள் அரசு எவ்வளவு சம்பாதித்து விடும் அல்லது சேமித்து விடும்?

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story