அபுதாபியில் இருந்து மும்பை வந்த விமானத்தில் அரை நிர்வாண கோலத்தில் பெண் பயணி ரகளை


அபுதாபியில் இருந்து மும்பை வந்த விமானத்தில் அரை நிர்வாண கோலத்தில் பெண் பயணி ரகளை
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:45 PM GMT)

அபுதாபியில் இருந்து மும்பை வந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் ரகளை செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். விமானம் தரையிறங்கியதும் அவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

அபுதாபியில் இருந்து மும்பை வந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் ரகளை செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். விமானம் தரையிறங்கியதும் அவர் கைது செய்யப்பட்டார்.

பெண் பயணி

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை மும்பைக்கு 'யு.கே.256' என்ற ஏர் விஸ்தாரா நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் இத்தாலியை சேர்ந்த பாவ்லா பெரூசியோ(வயது45) என்ற பெண் எக்னாமிக் கிளாஸ் டிக்கெட் பெற்று பயணம் செய்தார். நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்தபோது, திடீரென அவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து பிசினஸ் கிளாஸ் இருக்கைக்கு சென்று அமர்ந்தார்.

இதை கவனித்த விமான பணியாளர் எல்.எஸ்.கான் என்பவர் அந்த பெண்ணை அவரது இருக்கைக்கு திரும்புமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பெண் பயணி பாவ்லா, அந்த ஊழியரை முகத்தில் ஓங்கி குத்தினார். மேலும் விமானத்தில் ரகளையில் ஈடுபட்டார். பெண் பயணியை சமாதானம் செய்ய பணிப்பெண் ஒருவர் முயற்சி செய்தார். அப்போது, அந்த பணிப்பெண் மீது பெண் பயணி எச்சில் துப்பி திட்டினார்.

ஆடையை கழற்றினார்

மேலும் அந்த பெண் திடீரென மேல் ஆடையை கழற்றி அரை நிர்வாண கோலத்தில் விமானத்தில் அங்கும், இங்கும் நடந்தார். அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த வேளையில் பெண் பயணி ஒருவர் செய்த ரகளை மற்றும் அவரது அரை நிர்வாண கோலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மற்ற பயணிகள் எரிச்சல் அடைந்தனர். விமான பணியாளர்கள் எவ்வளவோ சொல்லியும் மதுபோதையில் இருந்த பாவ்லாவுக்கு காதில் ஏறவில்லை.

ஒருகட்டத்தில் பொறுமை இழந்த விமான பணியாளர்கள் விமானியின் அறிவுறுத்தலின் பேரில் ரகளையில் ஈடுபட்ட பாவ்லாவை வலுக்கட்டாயமாக பிடித்து ஆடையை அணிவித்தனர். பின்னர் கடைசி இருக்கையில் அமர வைத்து கயிற்றால் கட்டி வைத்தனர்.

அதிரடி கைது

விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் வந்து தரை இறங்கியதும், விமான பணியாளர்கள் ரகளையில் ஈடுபட்ட பெண்ணை போலீசில் ஒப்படைத்தனர். மேலும் விமான ஊழியர் எல்.எஸ்.கான் பெண் மீது தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக மும்பை சாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இத்தாலியை சேர்ந்த பெண் பயணி பாவ்லாவை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் அந்தேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவரை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது.

இந்தநிலையில் சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் போலீசார் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

விமான நிறுவனம் விளக்கம்

இந்த சம்பவம் தொடர்பாக விஸ்தாரா விமான நிறுவன செய்தி தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "விஸ்தாரா விமான நிறுவனம் தனது பயணிகளின் பாதுகாப்பு, மாண்புக்கு எந்தவிதமான இடையூறு ஏற்படுவதையும் பொறுத்து கொள்ளாது. அதேபோல் ஊழியர்களின் பாதுகாப்பையும், மாண்பையும் உறுதி செய்ய தவறாது. அதனால் சம்பவம் குறித்து உடனடியாக விமானி பாதுகாப்பு அமைப்புகளுக்கு தகவல் கொடுத்துவிட்டார். விமானம் தரையிறங்கியதும் உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர் பரிந்துரைத்தார்" என்று குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து வந்த பயணி ஒருவர் அருகில் அமர்ந்து பயணித்த பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பிரச்சினையை உருவாக்கியது. இந்தநிலையில் பெண் பயணி ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் ரகளை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story