வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் துப்பாக்கி முனையில் ரூ.12 லட்சம் கொள்ளை- 2 ஆசாமிகள் கைவரிசை


வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் துப்பாக்கி முனையில் ரூ.12 லட்சம் கொள்ளை- 2 ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:47 PM GMT)

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.12 லட்சம் கொள்ளை அடித்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

மும்பை,

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.12 லட்சம் கொள்ளை அடித்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

துப்பாக்கி முனையில் மிரட்டல்

மும்பை தாதர் மேற்கு கிர்த்தி கல்லூரி அருகே உள்ள குடியிருப்பு கட்டிடத்திற்குள் நேற்றுமுன்தினம் 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர்கள் 2 பேர் உள்ளே நுழைந்தனர். பின்னர் கட்டிடத்தில் வசித்து வரும் 72 வயது மூதாட்டியின் வீட்டு கதவை தட்டி உள்ளனர்.

அப்போது, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கதவை திறந்து பார்த்தபோது வெளியே நின்றிருந்த 2 பேர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டினர். இதில் பயந்து போன மூதாட்டியை வீட்டின் உள்ளே தள்ளி அவரை கயிற்றால் கட்டி போட்டனர்.

ஒருவர் கைது

பின்னர் வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளை அடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது பற்றி அறிந்த பக்கத்து வீட்டினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் அங்கு சென்று மூதாட்டியை மீட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் அவர் கொடுத்த தகவலின் படி ஒருவரின் அடையாளம் தெரியவந்தது. இதன்பேரில் போலீசார் அந்த நபரை பிடித்து கைது செய்தனர். மற்றொரு ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story