இலங்கையில் இருந்து கடத்தி வந்து வீட்டில் பதுக்கிய 3 கிலோ தங்கம் பறிமுதல்


இலங்கையில் இருந்து கடத்தி வந்து வீட்டில் பதுக்கிய 3 கிலோ தங்கம் பறிமுதல்
x

இலங்கையில் இருந்து கடத்தி வந்து, ராமேசுவரம் அருகே வீட்டில் பதுக்கிய 3 கிலோ தங்கத்தை அதிகாரிகள் மீட்டனர். மண்டபம் கடலில் வீசிய தங்கக்கட்டிகளை தேடும் பணி நேற்று தீவிரமாக நடந்தது.

ராமநாதபுரம்,

ராமேசுவரம் தீவில் இருந்து இலங்கை கடல் பகுதி மிக அருகாமையில் உள்ளது. எனவே இந்த கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகள், கஞ்சா, போதைப்பொருள், பீடி இலைகள், மஞ்சள் உள்ளிட்டவை அவ்வப்போது கடத்தி செல்லப்படுகின்றன.

இதுபோன்று இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதும் நடக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு அங்கிருந்து தங்கம் கடத்தல் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவே கடத்தலை தடுக்க கடற்படை, கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே 2 முறை இலங்கையில் இருந்து கிலோ கணக்கில் தங்கக்கட்டிகள் படகுகளில் கடத்தி வரப்பட்டு, அதிகாரிகளை கண்டதும் அந்த தங்கக்கட்டிகள் கடலில் வீசப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர் கடலோர காவல் படையில் நீச்சலில் நிபுணத்துவம் பெற்ற வீரர்கள் மூலம் தேடி, அந்த தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டன.

நடுக்கடலில் வீச்சு

இந்த நிலையில், மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக ராமேசுவரத்தை அடுத்த மண்டபம் கடல் பகுதியை நோக்கி தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய் பிரிவுக்கு ரகசிய தகவல் வந்தது. அதைதொடர்ந்து, நேற்று முன்தினம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் உதவியுடன், நடுக்கடலில் வந்த சந்தேகத்துக்கு இடமான ஒரு பைபர் படகை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது, படகில் வந்த கடத்தல்காரர்கள் தங்கக்கட்டிகளை நடுக்கடலில் வீசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த படகில் இருந்த வேதாளை பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

3 கிலோ தங்கம் மீட்பு

அப்போது, வேதாளை பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் 3 கிலோ தங்கக்கட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த வீட்டுக்கு சென்ற அதிகாரிகள், அங்கிருந்த 3 கிலோ தங்கக்கட்டிகளையும் கைப்பற்றினர். இதுதொடர்பாக மேலும் 2 பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவும் இலங்கையில் இருந்து கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த தங்கக்கட்டிகள் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் படகில் இருந்து நடுக்கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகளை, நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் உதவியுடன் தேடிவருகிறார்கள்.

ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் இருக்கும் தைரியத்தில், தங்கக்கட்டிகளை கடத்தல்காரர்கள் கடலில் வீசி உள்ளனர். அந்த தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் தேடிச்சென்று தங்கக்கட்டிகள் அடங்கிய பார்சலை எடுத்துவிடலாம் என திட்டமிட்டு உள்ளனர்.

ஆனால், அந்த இடம் அதிகாரிகளுக்கு தெரிந்துவிட்டதால் நேற்று சல்லடை போட்டு அந்த இடத்தில் தேடும் பணி நடந்தது. காலையில் இருந்து இரவு வரை தேடும் பணி நடந்தது. அதன்பின்பு தேடும் பணி நிறுத்தப்பட்டது.

2-வது நாளாக...

இன்று (வியாழக்கிழமை) 2-வது நாளாக தேடும் பணி நடக்க இருக்கிறது. அந்த இடத்துக்கு கடத்தல்காரர்கள் யாரும் செல்லாமல் இருக்க நேற்று இரவில் ரோந்து படகில் பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

கடலில் இருந்து தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்ட பின்னரே கடத்தல் தங்கம் குறித்த முழுமையான விவரம் தெரியவரும் என அதிகாரிகள் கூறினர்.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதமும் இதே போன்று இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 17 கிலோ தங்கக்கட்டிகள் மண்டபம் கடல் பகுதியில் கடத்தல்காரர்களால் வீசப்பட்டது. அதை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இந்திய கடலோர காவல்படையினர் இணைந்து மீட்டது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவம் நடந்த அடுத்த 3-வது மாதத்தில் மீண்டும் கடத்தல் தங்கம் கடலில் வீசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story