3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:45 PM GMT)

கடலூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கடலூர்

கடலூர் ரெட்டிச்சாவடி அருகே உள்ள புதுக்கடையை சேர்ந்தவர் ரமேஷ் மகன் அன்பரசன் (வயது 25), தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 2.5.2023 அன்று வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். ஆனால் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அன்பரசன் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரமேஷ், ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி அய்யனார் என்கிற தாடி அய்யனார் குறித்த தகவல்களை, அவருக்கு போட்டியாக ரவுடியிசத்தில் ஈடுபட்டு வரும் ஜோசப் என்கிற மணிகண்டனிடம் அன்பரசன் கூறியதாக நினைத்து புதுக்கடையை சேர்ந்த பார்த்தசாரதி (27), சிங்கிரிகுடி சுந்தர் என்கிற கார்த்திகேயன் (24), அர்ச்சுனன் என்கிற ஆனந்த், சிலம்பரசன், சந்தோஷ் ஆகியோர் அன்பரசனை கொலை செய்து சிங்கிரிகுடியில் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து பார்த்தசாரதி உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

கைதான பார்த்தசாரதி மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி என 6 வழக்குகளும், சுந்தர் என்கிற கார்த்திகேயன் மீது 2 கொலை வழக்குகளும், அர்ச்சுனன் என்கிற ஆனந்த் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் என 5 வழக்குகளும் உள்ளன. அதனால் அவர்களது தொடர் குற்றசெயல்களை கட்டுப்படுத்தும் வகையில், 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், பார்த்தசாரதி உள்ளிட்ட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடமும், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


Next Story