ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறை


ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறை
x

அம்பத்தூர் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சென்னை

அம்பத்தூர் அடுத்த பாடி சீனிவாசா நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவருடைய மனைவி சுலோச்சனா. கலைச்செல்வன் ஆவடி அடுத்த பொத்தூர் கிராமத்தில் உள்ள பொதிகை நகரில் 1,500 சதுர அடி இடத்தை சுலோச்சனா பெயரில் கிரையம் செய்து அதற்காக பட்டா மாறுதல் பெற வேண்டி பொத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமி என்பவரிடம் மனு கொடுத்தார். அதற்கு கந்தசாமி, ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

இதுபற்றி சுலோச்சனா சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இந்தநிலையில் சுலோச்சனாவிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கந்தசாமியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சிறப்பு நீதிபதி ஆர்.வேலரஸ் கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story