சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 42 பேர் காயம்


சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 42 பேர் காயம்
x

கள்ளூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 42 பேர் காயம் அடைந்தனர். இதில் வீரர்கள் காளைகளை அடக்கி பரிசு பொருட்களை அள்ளிச்சென்றனர்.

அரியலூர்

ஜல்லிக்கட்டு

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வெற்றியில் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளூர் கிராமத்தில் நேற்று ஊரின் நடுவில் வாடிவாசல் அமைக்கப்பட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அரசு அனுமதியுடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் தாசில்தார் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டில் முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. வீரர்கள் களத்தின் முன்பே உறுதிமொழி எடுத்துக்கொண்டு காளைகளை அடக்க தொடங்கினர். இதில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் மாடுபிடி வீரர்களால் அடக்கப்பட்டது. சில காளைகள் வீரர்களை அருகில் கூட நெருங்க விடாமல் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தன.

பரிசு பொருட்கள்

இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றி பெற்ற காளைகளுக்கும் மின்விசிறி, நாற்காலிகள், சைக்கிள், தங்க காசு, வெள்ளிக்காசு மற்றும் ரொக்கம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. சில மாட்டின் உரிமையாளர்கள் தங்கள் மாட்டை பிடித்தால் தங்கம், வெள்ளிக்காசு, மற்றும் ரொக்கம் ஆகியவற்றையும் பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்தனர். அப்படி அறிவிக்கப்பட்ட மாடுகளை பிடித்தவர்களுக்கு விழாக்குழுவினரிடம் இருந்து கொடுக்கப்பட்ட பரிசு மட்டுமின்றி மாட்டின் உரிமையாளர் அறிவித்த பரிசுகளையும் வாங்கி வழங்கினர்.

ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதி உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே களத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் மொத்தம் 754 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மொத்தம் 42 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 நபர்களுக்கு மட்டும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காலை 9 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு மதியம் 2.30 மணி அளவில் அனைத்து மாடுகளும் அவிழ்த்து விடப்பட்டு நிறைவுற்றது. இந்த ஜல்லிக்கட்டில் கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஜல்லிக்கட்டில் அரசு அதிகாரிகள், தி.மு.க. திருமானூர் ஒன்றிய செயலாளர் கென்னடி, ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.


Next Story