வாடகை பாக்கி வைத்திருந்த 6 கடைகளுக்கு 'சீல்'


வாடகை பாக்கி வைத்திருந்த 6 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:46 PM GMT)

நாகர்கோவிலில் வாடகை பாக்கி வைத்திருந்த 6 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் வாடகை பாக்கி வைத்திருந்த 6 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

ரூ.8½ லட்சம் பாக்கி

நாகர்கோவில் சரலூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான மீன் சந்தை மற்றும் வணிக வளாகம் உள்ளது. மீன் சந்தைக்குள்ளும், வெளியிலும் மொத்தம் 26 கடைகள் உள்ளன. இதில் சந்தைக்குள் 12 கடையை சேர்ந்தவர்களும், வெளியில் 4 கடைகளை சேர்ந்தவர்களுமாக மொத்தம் 16 கடை வியாபாரிகள் வாடகை பாக்கி வைத்திருந்தனர்.

அதாவது ரூ.8 லட்சத்து 47 ஆயிரத்து 86 வாடகை பாக்கி இருந்தது. அதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பாக்கி செலுத்தப்படவில்லை.

பலத்த பாதுகாப்பு

இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராம்மோகன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் ஞானப்பா, சுப்பையா, ஆல்ட்ரின், சேகர் உள்ளிட்டோர் நேற்று காலை சரலூர் மீன் சந்தைக்கு சென்று கடைகளை பூட்டி சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து 10 கடைக்காரர்கள் வாடகை பாக்கியை செலுத்தினர்.

எனவே வாடகை பாக்கி கட்டாத 6 கடைகளுக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டது. இந்த 6 கடைக்காரர்களும் ரூ.4 லட்சம் பாக்கி வைத்திருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள். கடைகளுக்கு சீல் வைத்த நடவடிக்கையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story