மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் ரவுடி பலி


மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் ரவுடி பலி
x

குரும்பலூரில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ரவுடி பலியானார்.

பெரம்பலூர்

வாகனம் மோதியது

பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை பின்புறம் ஒட்டத்தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் நீலகண்டன் (வயது 26). இவரது சகோதரருக்கு பெரம்பலூர் அம்மாபாளையம் பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தினை நீலகண்டன் பராமரித்து வந்தார். மேலும் இரவு நேரத்தில் தோட்டத்தின் பாதுகாப்புக்காக செல்வார்.

அதன்படி நீலகண்டன் நேற்று முன்தினம் இரவு அம்மாபாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

ரவுடி பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த நீலகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நீலகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த நீலகண்டன் ரவுடி என்பதும், அவர் மீது பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story