சென்னை புறநகர் பகுதியில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்


சென்னை புறநகர் பகுதியில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
x

சென்னை புறநகர் பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை

கள்ளச்சாராய சாவு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை பொருள் புழக்கம் உள்ளிட்டவைகளை தடுக்க தமிழக அரசு தவறி விட்டதாக கூறி அ.தி.மு.க. சார்பில் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவொற்றியூர், பெரியார் நகரில் மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், அவைத்தலைவர் பா.ராஜேந்திரன், பகுதி செயலாளர் அஜாக்ஸ் எஸ்.பரமசிவம், மாநகராட்சி கவுன்சிலர்கள் டாக்டர் கே. கார்த்திக், முல்லை ராஜேஷ், ஸ்ரீதரன், வக்கீல் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ஆர்.ரமேஷ்பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வினர், "கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்து, மின் கட்டணம், பால் விலை உயர்வை ரத்து செய், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டு" என கோஷமிட்டனர்.

தாம்பரம் சண்முகம் சாலையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சிட்லப்-பாக்கம் ராஜேந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாநில மகளிர் அணி செயலாளருமான பா.வளர்மதி, முன்னாள் அமைச்சர் சின்னையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பெஞ்சமின் தலைமையில் மதுரவாயலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அலெக்சாண்டர் தலைமையில் அம்பத்தூர் ஓ.டி அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், பகுதி செயலாளர் கே.பி.முகுந்தன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதேபோல் சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதும் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட மற்ற மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story