சித்தாமூரில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


சித்தாமூரில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

காஞ்சீபுரம், சித்தாமூரில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு

ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராய இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் போன்றவற்றை தமிழக அரசு தடுக்க தவறி விட்டதாக கூறி காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனி, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி காஞ்சீ பன்னீர்செல்வம், அ.தி.மு.க. நிர்வாகிகள் கே.யு.எஸ்.சோமசுந்தரம், வக்கீல் வீ.வள்ளிநாயகம், வி.பாலாஜி, கண்ணபிரான் உள்பட பலர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சித்தாமூர்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சித்தாமூர் பஸ்நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்டஅ.தி.மு.க. செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலமகளிர் அணி இணைச் செயலாளரும் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மரகதம் குமரவேல் கலந்துகொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தனபால், மனோகரன், சித்தாமூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மதுராந்தகம் ஒன்றிய செயலாளர் அப்பாதுரை, கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தாம்பரம்

தாம்பரம் சண்முகம் சாலையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சிட்லப்-பாக்கம் ராஜேந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாநில மகளிர் அணி செயலாளருமான பா.வளர்மதி, முன்னாள் அமைச்சர் சின்னையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பெஞ்சமின் தலைமையில் மதுரவாயலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.


Next Story