பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்கு விசாரணை விவரங்களை 'வாட்ஸ்-அப்' மூலம் அனுப்பும் முறை அறிமுகம்: போலீஸ் சூப்பிரண்டு தகவல்


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான  வழக்கு விசாரணை விவரங்களை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பும் முறை அறிமுகம்:  போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்கு விசாரணை விவரங்களை ‘வாட்ஸ்-அப்’ மூலம் அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

தேனி

பாலியல் வன்கொடுமை

இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பல்வேறு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க அனைத்து முயற்சிகளும் காலதாமதமின்றி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முக்கியமாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் அதிக கவனத்துடன் கையாளப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசால் வழங்கப்படும் நிவாரண நிதி மற்றும் இடைகால நிவாரணம் ஆகியவற்றை கோர்ட்டு மூலம் பெற்று தருவதுடன், குற்ற செயலில் ஈடுபட்டவர்களை ஜாமீனில் வெளிவிடாமல் இருக்க கடும் ஆட்சேபனை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ்-அப் மூலம் அனுப்பலாம்

இதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில், வழக்குகள் கோர்ட்டு விசாரணையில் இருக்கும் போது வழக்குகளின் நிலை பற்றி அறிந்து கொள்ள பாதிக்கப்பட்டவர்கள் அல்லது புகார்தாரர்களின் செல்போனுக்கு 'வாட்ஸ்-அப்' அல்லது குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறையை தொடர்ந்து கண்காணிக்கவும், செயல்படுத்தவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் ஒரு குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு என்ன நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு விழிப்புடன் இருக்கவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரவும் நல்ல வாய்ப்பாக அமையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story