ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை சுருட்டிய வேலைக்கார பெண்; ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளிலும் கைவரிசையா?


ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை சுருட்டிய வேலைக்கார பெண்; ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளிலும் கைவரிசையா?
x

ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை சுருட்டியதாக கைதான வேலைக்கார பெண், ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளிலும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் அதிரடி விசாரணையை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் போயஸ்கார்டன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 9-ந் தேதி ஐஸ்வர்யா தனது நகைகள் உள்ள லாக்கர் பெட்டியை திறந்து பார்த்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. லாக்கர் பெட்டியில் இருந்த சுமார் 60 பவுன் தங்க, வைர, நவரத்தின கற்கள் பதித்த பாரம்பரியமான நகைகளை காணவில்லை.

உடனே ஐஸ்வர்யா சென்னை தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு மாதமாக ரகசியமாக விசாரித்து வந்தனர். இந்த திருட்டு வழக்கு தொடர்பான தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

வேலைக்கார பெண் கைது

இந்த வழக்கில் அதிரடியாக ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்த வேலைக்கார பெண் ஈஸ்வரியும், கார் டிரைவர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டனர். 60 பவுன் தங்க, வைர நகைகள் மட்டும் திருட்டு போனதாக புகாரில் கூறி இருந்தாலும், 100 பவுனுக்கு மேல் தங்க நகைகளும், 30 கிராம் வைரமும், 4 கிலோ வெள்ளி பொருட்களும் மற்றும் திருடிய நகைகளை விற்று சோழிங்கநல்லூரில் நிலம் வாங்கி கட்டிய 2 மாடி வீட்டின் பத்திரங்களையும் மீட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் ஈஸ்வரியின் திருட்டு லீலைகள் இதோடு நின்றிருக்க வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது. ஐஸ்வர்யா தற்போது பறி கொடுத்த நகைகள் அவரது தந்தை ரஜினிகாந்த் ஆசையாக வாங்கி கொடுத்த பொக்கிஷம் போன்ற நகைகள் ஆகும்.

வேலைக்கார பெண்ணை தாண்டி...

வேலைக்கார பெண் ஈஸ்வரியின் திருட்டு லீலைகள் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஈஸ்வரி சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர். அவரது கணவர் பெயர் அங்கமுத்து. அவருக்கு பெரிய அளவில் வேலை இல்லை. 2006-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ஈஸ்வரி வேலைக்கு சேர்ந்தார். நல்ல பெண் போல நடித்து ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவிடம் நெருக்கமாகி விட்டார். நடிகர் தனுசிடமும் அன்பை பெற்று விட்டார்.

இதனால் வேலைக்காரி என்பதை தாண்டி அதிக அதிகாரத்துடன் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வலம் வந்துள்ளார். நகை வைக்கும் லாக்கர் பெட்டியின் சாவி இருக்கும் இடத்தை தெரியும் அளவுக்கு, ஈஸ்வரியின் ராஜ்ஜியம் இருந்துள்ளது.

தனது கணவருக்கு பெரிய அளவில் காய்கறி கடை வைத்து கொடுத்துள்ளார். தனது மூத்த மகளையும் நல்ல இடத்தில் ஈஸ்வரி திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இதனால் ஈஸ்வரி மீதுசந்தேக வலை பெரிய அளவில் நீண்டுள்ளது. கார் டிரைவர் வெங்கடேசனுக்கு திருட்டு விவகாரம் தெரிய வரவே அவரையும் கைக்குள் போட்டுள்ளார். தங்களது வீட்டுக்கு ஒரு காக்கும் வேலியாக நினைத்து ஈஸ்வரி மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு சகல அதிகாரமும் கொடுத்துள்ளனர். ஆனால் நம்பிக்கை துரோகம் செய்து, வேலியே பயிரை மேய்ந்தது போல, ஈஸ்வரி நடந்துள்ளார்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளிலும் கைவரிசையா?

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ஏற்கனவே விலை உயர்ந்த வைர மோதிரம் திருட்டு போய், பின்னர் அது மீட்கப்பட்டது. தற்போது வேலைக்கார பெண்ணே இவ்வளவு பெரிய திருட்டில் ஈடுபட்டு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளார். ஈஸ்வரி ஐஸ்வர்யாவோடு நிற்காமல், நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் வீடுகளிலும் கைவரிசை காட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈஸ்வரியின் கணவர் அங்கமுத்து தொடர்ந்து விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளார். ஈஸ்வரியும், வெங்கடேசனும் நீதிமன்ற காவலோடு சிறையில் உள்ளனர். ஆனால் விசாரணை தொடர்கிறது.


Next Story