பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:45 PM GMT)

பிற்படுத்தபட்டோர் நலத்துறை மூலம் நடத்தப்படும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை

பிற்படுத்தபட்டோர் நலத்துறை மூலம் நடத்தப்படும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

விடுதிகள்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கென 21 பள்ளி மாணவர்கள் விடுதிகளும், 14 பள்ளி மாணவிகள் விடுதிகளும், 5 கல்லூரி மாணவர்கள் விடுதிகளும், 5 கல்லூரி மாணவிகள் விடுதிகளும் என மொத்தம் 45 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் சேர தகுதியுடையவர்கள்.

அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகளும் விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள்

விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து மாணவா்கள் பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தொலைவு விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்த வரை, சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15-ந் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்த வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை 15-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

பயனடையலாம்

மாணவ, மாணவியா்கள் விண்ணப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் போன்றவற்றை அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, மாணவ, மாணவிகள் அரசின் இச்சலுகைகளைப் பெற்று, பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story