ரத்த காயங்களுடன் கிணற்றில் தொழிலாளி பிணம்


ரத்த காயங்களுடன் கிணற்றில் தொழிலாளி பிணம்
x

அருப்புக்கோட்டை அருகே ரத்த காயங்களுடன் கிணற்றில் தொழிலாளி பிணம் மீட்கப்பட்டது. கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே ரத்த காயங்களுடன் கிணற்றில் தொழிலாளி பிணம் மீட்கப்பட்டது. கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி பிணம்

அருப்புக்கோட்டை பாளையம்பட்டி நான்கு வழி சாலை அருகே உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் ஒருவர் உடல் கிடப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கிணற்றில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாளையம்பட்டி தேங்காய் நந்தவனம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்துமணி (வயது 43) என்பதும் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

கொலையா?

கிணற்றில் மிதந்து இறந்து கிடந்த முத்துமணியின் உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டு காயங்கள் இருப்பதும், அங்குள்ள மோட்டார் அறையிலும் ரத்த கறைகள் தென்பட்டதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசகபெருமாள் நேரில் விசாரணை நடத்தினார். இறந்து கிடந்த கட்டிட தொழிலாளி முத்துமணி அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் தூக்கி வீசப்பட்டாரா? அல்லது அவர் எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story