கிணற்றில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி


கிணற்றில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி
x

மூங்கில்துறைப்பட்டு அருகே கிணற்றில் மூழ்கி அண்ணன்-தம்பி பரிதாபமாக இறந்தனர். அவர்களி்ன் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பிரம்மகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி மாலா. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு தமிழ்மாறன்(10), மோகனபிரியன்(9) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். நந்தினி (வயது 13) என்கிற மகள் இருக்கிறார்.

நந்தினி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ்மாறன் 5-ம் வகுப்பும், மோகனபிரியன் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

பெற்றோர் அதிர்ச்சி

இந்த நிலையில் நேற்று காலை தமிழ்மாறன், மோகனபிரியன் ஆகியோர் வீட்டில் உள்ளவர்களிடம் இயற்கை உபாதை கழிக்க ஏரிக்கரைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால் நீண்டநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரி அருகில் உள்ள ஒரு கிணற்றின் மேல் பகுதியில் மோகனபிரியன் மற்றும் தமிழ்மாறனின் செருப்புகள் கிடந்தன. எனவே 2 பேரும் கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கிணற்றில் மூழ்கி பலி

இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் அவர்களை மீட்க முடியவில்லை. இதையடுத்து மின்மோட்டார் மூலம் கிணற்றில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

அதன்பிறகு தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மோகனபிரியன், தமிழ்மாறன் ஆகியோரை பிணமாக மீட்டனர். இயற்கை உபாதை கழித்துவிட்டு 2 பேரும் கால்கழுவுவதற்காக கிணற்றில் இறங்கியபோது கால்தடுமாறி தண்ணீரில் விழுந்ததும், மூச்சுத்திணறி இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கையில் வடபொன்பரப்பி போலீசார் ஈடுபட்டனர். ஆனால் பிரேத பரிசோதனை செய்வதற்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சோகத்தில் மூழ்கிய கிராமம்

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி அண்ணன்-தம்பி இறந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


Next Story