'ஏற்றத்திற்கான மாற்றம் ஈரோடு கிழக்கிலிருந்து ஆரம்பம்' - வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்த ஈபிஎஸ்...!


ஏற்றத்திற்கான மாற்றம் ஈரோடு கிழக்கிலிருந்து ஆரம்பம்  - வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்த ஈபிஎஸ்...!
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசு அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

முதல் நாளில் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே, இடைத்தேர்தல் நெருக்கி வருவதால் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் பாஜகவுடனான கூட்டணி யாருக்கு என இன்னும் முடிவாகாததால் வேட்பாளர் அறிவிப்பு காலதாமதம் ஆனது. இன்நிலையில் ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் போட்டியிட ஈபிஎஸ் தரப்பு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு போட்டியிடுவார் என இன்று காலை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட தென்னரசுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு.கே.எஸ்.தென்னரசு,அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஏற்றத்திற்கான மாற்றம் ஈரோடு கிழக்கிலிருந்து ஆரம்பம்...!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.





Next Story