தொட்டியம் அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பு இடையே மோதல்


தொட்டியம் அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பு இடையே மோதல்
x

தொட்டியம் அருகே கோவில் தேர் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.

திருச்சி

கோவில் திருவிழா

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே வரதராஜபுரத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று மாலை கோவில் தேரோட்டம் நடைபெற்றது. தேர் ஊருக்குள் சென்று கொண்டிருந்த போது இருவேறு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர்.

பிறகு ஒரு சமூகத்தினர் மற்றொரு சமூகத்தினருடைய வீட்டை அடித்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. பிறகு தேரை ஒரு சமூகத்தினர் தூக்க முயன்றபோது போலீசார் தடுத்து இன்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தைக்கு பிறகு தூக்கி கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து மீண்டும் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

போலீசார் குவிப்பு

இந்தநிலையில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் சாலை மறியல் செய்ய முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். கல்வீச்சில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து, திருச்சி போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு குற்றாலிங்கம், முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அப்பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க இன்ஸ்பெக்டர் முத்தையா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story