புகாருக்குள்ளாகி இடமாறுதல் செய்யப்பட்டஆசிரியருக்கு மீண்டும் அதே பள்ளியில் பணி


புகாருக்குள்ளாகி இடமாறுதல் செய்யப்பட்டஆசிரியருக்கு மீண்டும் அதே பள்ளியில் பணி
x

புகாருக்குள்ளாகி இடமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியருக்கு மீண்டும் அதே பள்ளியில் பணி முதன்மை கல்வி அலுவலரிடம், பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை தாலுகா அந்தேவனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் அரவிந்தன், மற்றும் ஊர் பொதுமக்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பணியாற்றி வந்த ஆசிரியர் வினோத்குமார் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. ஆசிரியர் நிதியில் முறைகேடு, ஆசிரியைகள், மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்தல் தொடர்பான புகார்களுக்கு உள்ளான அவரை இடமாற்ற கோரி ஊர் பொதுமக்கள், பெற்றோர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஆசிரியர் வினோத்குமார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் கக்கதாசம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பணிமாறுதல் செய்யப்பட்டார். மேலும் அவரது மனைவி ஹேமாவும் அதே பள்ளியில் இருந்து டி.சூளகுண்டா பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இருப்பினும் அவர் பணியில் சேராமல் தொடர்ந்து அந்தேவனப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஆசிரியர் வினோத்குமார் மீண்டும் அதே அந்தேவனப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பணி மாறுதல் ஆகி உள்ளார். இதனால் மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசின் விதிமுறைகளுக்கு மாறாக பணி மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் தொடர் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story