தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம்


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம்
x

கல்விக்கொள்கை குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

வேலூர்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தமிழக கல்வி கொள்கை குறித்து தமிழகத்தில 4 மண்டலங்களாக பிரித்து கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை, திருவள்ளுர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டல கருத்து கேட்பு கூட்டம் காட்பாடி அக்சீலியம் கல்லூரியில் நடந்தது. வேலூர் மாவட்ட தலைவர் பெ.அமுதா தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் செ.நா.ஜனார்த்தனன், கே.விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். மாவட்ட செயலாளர் முனிசாமி வரவேற்றார்

வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் எல்.நாராயணசாமி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து பேசினார். மாநில துணைத்தலைவர் என்.மாதவன் தமிழக கல்வி கொள்கையில் இடம்பெற வேண்டிய பாடங்கள் குறித்து பேசினார். மாநில பொதுச்செயலாளர் எஸ்.சுப்பிரமணி தேசிய கல்விகொள்கை 2020 குறித்து விளக்கி பேசினார்.

மாநிலக்குழு உறுப்பினர் கலைநேசன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் மோசஸ், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பழனிவேல், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசுதா, அக்சீலியம் கல்லூரி கிளை செயலாளர் காயத்ரி ஆகியோர் கருத்துகளை சமர்பித்து பேசினர்.

இந்த கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. மழலையர் கல்வி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தமிழகத்திற்கான கல்விக்கொள்கை குறித்து தனித்தனி தலைப்புகளில் கருத்துகள், ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. 4 மண்டலத்திலிருந்து பெறப்படும் கருத்துகள், ஆலோசனைகள் யாவும் தமிழக அரசிடம் சமர்பிக்கப்படும் என மாநில பொதுச்செயலாளர் எஸ்.சுப்பிரமணி கூறினார்.


Next Story