கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 1928 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 1928 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழக அரசின் உத்தரவுப்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திகொள்ளாதவர்கள் பயன்பெறும் வகையில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று 1,928 இடங்களில் 38-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. மேலும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிலும் முகாம்கள் நடைபெற்றன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவுப்படி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், வட்டார மருத்துவ அலுவலர்கள் தடுப்பூசி முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முகாமுக்கு தேவையான அனைத்து தடுப்பு மருந்துகளும் தயார் நிலையில் உள்ளதா?, தடுப்பூசி செலுத்த வராதவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

21,003 பேருக்கு தடுப்பூசி

இதையடுத்து சுகாதாரத்துறையினர் முன்னிலையில் செவிலியர்கள் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதேபோன்று மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களையும் கண்டுபிடித்து அவர்களது வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,928 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் மொத்தம் 21,003 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.


Next Story