விருத்தாசலம் அருகேகுடிநீர் தொட்டியில் உடல் அழுகிய நிலையில் என்ஜினீயர் பிணம்கொலையா? போலீசார் விசாரணை


விருத்தாசலம் அருகேகுடிநீர் தொட்டியில் உடல் அழுகிய நிலையில் என்ஜினீயர் பிணம்கொலையா? போலீசார் விசாரணை
x

விருத்தாசலம் அருகே குடிநீர் தொட்டியில் உடல் அழுகிய நிலையில் என்ஜினீயர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கடலூர்

விருத்தாசலம்,

என்ஜினீயர் மாயம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ராஜேந்திரபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கரன். இவருடைய மகன் சரவணக்குமார் (வயது 37). என்ஜினீயரான இவருக்கு திருமணமாகவில்லை. வேலையின்றி வீட்டில் இருந்து வந்த சரவணக்குமார் கடந்த 9 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாயமான அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பதறிய குடும்பத்தினர் மாயமான சரவணக்குமாரை கண்டு பிடித்து தரக்கோரி கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணக்குமாரை தேடி வந்தனர்.

குடிநீர் தொட்டிக்குள் பிணம்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் ஊராட்சி மூலம் வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் கடும் துர்நாற்றம் வீசுவதாக ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் நேற்று மாலை ஊராட்சி பணியாளர்கள் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் ஏறி பார்த்தனர். அப்போது கடந்த 9 நாட்களுக்கு முன்பு மாயமான சரவணக்குமார் உடல் அழுகிய நிலையில் பிணமாக மிதந்தது தெரிய வந்தது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஊராட்சி பணியாளர்கள் இதுபற்றி கருவேப்பிலங்குறிச்சி போலீசாருக்கும், ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு நிலையத்துக்கும், சிவசங்கரன் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சரவணக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

இதனிடையே இச்சம்பவத்தை அறிந்த அக்கிராம மக்கள் குடிநீர் தொட்டி முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சரவணக்குமார் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து குடிநீர் தொட்டிக்குள் போட்டுச் சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுகாதாரத்துறை கண்காணிப்பு

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உடல் அழுகிய நிலையில் பிணம் கிடந்த குடிநீரை பயன்படுத்திய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிணம் அழுகிய நிலையில் இருந்ததாலும், கடந்த சில நாட்களாக பொதுமக்கள் அந்த குடிநீரையே குடித்து வந்ததாலும் பொது மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அக்கிராமத்தில் முகாமிட்டு குடிநீரை பயன்படுத்திய பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர். மேலும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வாகனம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. மர்மமான முறையில் இறந்து கிடந்த சரவணக்குமாரின் தந்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story