வடக்கு ஏரியை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு


நாட்டார்மங்கலம் வடக்கு ஏரியை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு மதகுகள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்

வடக்கு ஏரி

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தின் வடக்கு பகுதியில் ஏரி ஒன்று உள்ளது. வடக்கு ஏரி என்று அழைக்கப்படும் இந்த ஏரிக்கு சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தால் வரத்து வாய்க்கால்கள் மூலம் மழைநீர் அதிகளவில் வரும். மேலும் அருகே உள்ள மலைப்பகுதியில் இருந்தும் ஊற்று நீர் இந்த ஏரிக்கு வரும். ஏரிக்கரையின் தென்புறம் ஏராளமான விவசாய பாசன நிலங்கள் உள்ளன. இந்த ஏரி நிரம்பினால் பாசன வாய்க்கால் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும்.

தற்போது விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் தூர்ந்து போய் கிடக்கின்றன. இதனால் மழை பெய்யும் காலங்களில் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் மழைநீர் உரிய வழியில் பயன்படாமல் வீணாகும் நிலை உள்ளது. மேலும் மழைநீரை ஏரியில் சேகரிக்க முடியாததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ஏரி பகுதியில் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. பாசன வாய்க்கால்களுக்கு ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் மதகும் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு மழை பெய்த போது மதகு பழுதானதால் ஏரியில் தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் வீணாகி விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டன.

தற்போது இந்த ஏரியில் ஆங்காங்கே குட்டை போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

மதகுகள் அமைக்க கோரிக்கை

ஏரி மற்றும் அதன் வரத்து வாய்க்கால், பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும். மேலும் ஏரியின் கரைகளையும் ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, கரையை அகலப்படுத்த வேண்டும். மேலும் ஏரியில் பழைய காலத்திலான மதகை அகற்றி தற்போதைய நவீன முறையிலான மதகுகள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


Next Story