கிணற்றில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு


கிணற்றில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு
x
திருப்பூர்


நத்தக்காடையூர் அருகே கிணற்று நீரில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். நண்பர்களுடன் குளிக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

கல்லூரி மாணவர்

திருப்பூர் அருகே உள்ள சென்னிமலைபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் செந்தில்நாதன். இவரது மகன் தீபக் பிரசாத் (வயது 20). இவர் நத்தக்காடையூர் பகுதியில் உள்ள பில்டர்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி என்ஜீனியரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் தீபக் பிரசாத் மற்றும் அவருடன் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு நஞ்சப்பகவுண்டன்வலசு பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றனர். தீபக் பிரசாத்திற்கு நீச்சல் தெரியாததால் காலி தண்ணீர் கேனை ஒன்றை இடுப்பில் கட்டிக்கொண்டு நண்பர்களுடன் கிணற்றில் இறங்கி குளித்தார். அதன் பின்பு தண்ணீர் கேனை அவிழ்த்து விட்டு கிணற்றின் படிக்கட்டில் இருந்து மேலே ஏறி வரும் போது திடீரென்று எதிர்பாராத விதமாக தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார்.

சாவு

இதனை தொடர்ந்து அவரது நண்பர்கள் கிணற்றில் குதித்து தீபக் பிரசாத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவரது நண்பர்களால் தீபக் பிரசாத்தை மீட்க முடியவில்லை. இதுபற்றிய தகவலின் பேரில் காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரா.முனீஸ்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீபக் பிரசாத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். ஆனால் தீபக் பிரசாத் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதையடுத்து தீபக் பிரசாத்தின் உடலை அவருைடய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பார்த்து கதறி அழுதனர். பின்னர் தீபக் பிரசாத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது பற்றிய புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story