கோடியக்கரையில் முன்கூட்டியே மீன்பிடி சீசன் தொடங்கியது


கோடியக்கரையில் முன்கூட்டியே மீன்பிடி சீசன் தொடங்கியது
x

வேதாரண்யம் கோடியக்கரையில் முன்கூட்டியே மீன்பிடி சீசன் தொடங்கியது. இதற்காக படகுகள்-வலைகளுடன் வெளியூர் மீனவர்கள் வந்துள்ளனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் கோடியக்கரையில் முன்கூட்டியே மீன்பிடி சீசன் தொடங்கியது. இதற்காக படகுகள்-வலைகளுடன் வெளியூர் மீனவர்கள் வந்துள்ளனர்.

மீன்பிடி சீசன்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா, கோடியக்கரை பகுதியில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இந்த காலத்தில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் காரைக்கால், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் இங்கு வந்து தங்கி கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபடுவர்.அவர்கள் பிடிக்கும் மீன்கள் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கும் வாகனங்களில் அனுப்பி வைக்கப்படும். இந்த மீன்பிடி காலத்தில் நாளொன்றுக்கு 5 முதல் 20 டன் வரையில் மீன்கள் பிடிக்கப்பட்டு விற்கப்படும். அவற்றில் வகைவகையான மீன்கள் சிக்கும். அந்த மீன்களின் வகைக்கு ஏற்றவாறு விற்பனை இருக்கும்.

முன்கூட்டியே தொடங்கியது

வழக்கமாக அக்டோபர் மாதம் முதல் வாரம் மீன்பிடி சீசன் காலம் தொடங்கினாலும் இந்த ஆண்டு வானகிரி, சின்னமேடு, பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, சாமாத்தான்பேட்டை, காரைக்கால், மடவாய்மேடு, அக்கரைபேட்டை ஆகிய இடங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் கோடியக்கரை பகுதிக்கு தற்போதே வந்துள்ளனர். அவர்கள் படகுகள் மற்றும் வலைகளுடன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், வழக்கத்தை விட இந்த ஆண்டு முன்கூட்டியே மீன்பிடி காலம் தொடங்கியுள்ளது. வெளியூர் மீனவர்களின் வருகையால் கோடியக்கரை மீன் பிடத்தளம் தற்போது சுறுசுறுப்பாக காணப்படுகிறது. வெளியூரில் இருந்து வந்துள்ள மீனவர்களுக்கு உள்ளூர் மீனவர்கள் தங்குமிடம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

ரூ.200 கோடிக்கு வர்த்தகம்

இதுகுறித்து கோடியக்கரை மீனவர் நலச்சங்க முன்னாள் செயலாளர் சித்திரவேல் கூறுகையில், வழக்கமாக அக்டோபர் முதல் வாரத்தில் மீன்பிடி சீசன் தொடங்கி மார்ச் மாதம் வரை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே சீசன் தொடங்கியுள்ளதால் அதிக அளவில் வெளியூர் படகுகள் வந்துள்ளது.வெளியூரிலிருந்து வரும் மீனவ குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மீன்பிடி சீசன் சரியில்லாத நிலையில் இந்தஆண்டு சீசன் நன்றாக இருக்கும். சுமார் ரூ.200 கோடிக்கு வர்த்தகம் இருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.


Next Story