சென்னை கொரட்டூரில் ரூ.45 லட்சத்தை பறித்து சென்று கொலை மிரட்டல் - பா.ஜ.க. நிர்வாகி உள்பட 2 பேர் கைது


சென்னை கொரட்டூரில் ரூ.45 லட்சத்தை பறித்து சென்று கொலை மிரட்டல் - பா.ஜ.க. நிர்வாகி உள்பட 2 பேர் கைது
x

சென்னை கொரட்டூரில் ரூ.45 லட்சத்தை பறித்து சென்று கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் பா.ஜ.க. நிர்வாகி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

சென்னை வில்லிவாக்கம் 9-வது தெருவை சேர்ந்தவர் நாராயணி. இவர் கடந்த 10-ந் தேதி சென்னை கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் கொரட்டூரில் உள்ள தனது பூர்வீக சொத்தான 78 சென்ட் நிலத்தை விற்பதற்காக நண்பர் சதீஷ் மற்றும் தரகர் பிரகாஷ்ராஜ் ஆகியோரை அணுகினேன். சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்பது தொடர்பாக சில சிக்கல்கள் இருந்ததால், அதை தீர்த்து வைத்து இடத்தை விற்று கொடுப்பதற்காக கமிஷன் அடிப்படையில் பா.ஜ.க நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் மின்ட் ரமேஷ் என்பவரை அணுகினோம்.

இந்நிலையில் வேறு ஒருவர் மூலம் ரூ.5 கோடிக்கு நிலம் விற்கப்பட்டதை தெரிந்து கொண்ட ரமேஷ், தனது கூட்டாளியான நாகர்கோவில் மகேஷ் என்பவருடன் வீட்டிற்கு வந்து என்னிடமிருந்த ரூ.45 லட்சத்தை பறித்து சென்றார்.

மேலும் இது குறித்து போலீசுக்கு புகார் தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் நாராயணி கூறியிருந்தார்.

அதேபோல் தரகர் பிரகாஷ்ராஜ் கடந்த 18-ந் தேதி கொரட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் மின்ட் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளியான நாகர்கோவில் மகேஷ் நேரில் வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தார்.

இந்த 2 புகாரின் பேரில், கொரட்டூர் போலீசார் தனித்தனியாக 2 வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் மின்ட் ரமேஷ் மற்றும் நாகர்கோவில் மகேசை கைது செய்தனர்.


Next Story