காட்டு பன்றிக்காக அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு


காட்டு பன்றிக்காக அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு
x

சோழவந்தான் அருகே காட்டுப்பன்றிக்காக அமைத்த மின்வேலியில் மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பலியானார்.

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே காட்டுப்பன்றிக்காக அமைத்த மின்வேலியில் மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பலியானார்.

மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் போஸ்(வயது 62). விவசாயி. இவருடைய வயலில் நெற்கதிர் அறுவடை நடைபெற்றது. அதை பார்ப்பதற்காக நேற்று காலை போஸ் வயலுக்கு சென்றார். அதன் பிறகு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடி வயலுக்கு சென்றனர். வயலில் மின்சாரம் தாக்கி போஸ் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காட்டுப்பன்றிக்காக போடப்பட்ட மின்வேலி

தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசக்தி, விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வயலில் காட்டு பன்றிகள் நுழையாமல் இருக்க மின்வேலி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மின்வேலி வழியாக மின்சாரம் பாய்ச்சப்பட்டு இருந்தது.. இது தெரியாமல் வயலுக்கு வந்த போஸ் மின்வேலியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக தற்போது அந்த நிலத்தில் விவசாயம் செய்து வரும் கர்ணன்(56) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சோழவந்தான் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story