ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்கலாம்


ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்கலாம்
x

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 14-வது தவணை தொகையை பெற ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்கலாம் என தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி அழைப்பு விடுத்துள்ளார்.

தஞ்சாவூர்

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 14-வது தவணை தொகையை பெற ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்கலாம் என தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி அழைப்பு விடுத்துள்ளார்.

14-வது தவணை தொகை

இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்தியஅரசின் பிரதமமந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் இந்த மாதத்தின் (ஜூன்) முதல் வாரத்தில் வழங்கப்பட உள்ள 14-வது தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர், கிராம தபால் ஊழியரை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் 2.17 லட்சம் விவசாயிகளும், தஞ்சை மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் விவசாயிகளும் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இதுவரை இல்லாமல் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாக தபால்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நிமிடங்களில் வங்கி கணக்கு

இந்திய தபால் துறையின் தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் செல்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல்ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும்.

இதற்காக மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தலாம். அல்லது தபால் நிலையங்கள், தபால்காரர், கிராம தபால் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story