ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் நிதி கட்டமைப்பு மாநாடு; சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது


ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் நிதி கட்டமைப்பு மாநாடு; சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது
x

ஜி20 நாடுகளின் நிதி கட்டமைப்பு மாநாடு சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று நிதி, பொருளாதாரம் குறித்து விவாதிக்கின்றனர்.

சென்னை,

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, கனடா, ஆஸ்திரேலியா, ரஷியா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், மெக்சிகோ, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளை கொண்ட உலகின் சக்திவாய்ந்த கூட்டமைப்பாக ஜி20 உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த கூட்டமைப்பில் இருக்கும் ஒரு நாடு இதன் தலைமை பதவியை ஏற்கும். அதன்படி, 2023-ம் ஆண்டின் தலைமை பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.

கல்வி, நிதி, பொருளாதாரம், உணவு, எரிபொருள், சுற்றுச்சூழல் மேம்பாடு, பருவநிலை மாற்றம், பன்னாட்டு நல்லுறவு, எரிசக்தி பாதுகாப்பு, பேரிடர் உதவி போன்ற பல்வேறு தலைப்புகளில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிதி கட்டமைப்பு மாநாடு

இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இந்த விவாதம் நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் சென்னையில் கல்வி தொடர்பான மாநாடு கடந்த ஜனவரி 31, பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் நடந்தது.

தற்போது நிதி கட்டமைப்பு தொடர்பான மாநாடு சென்னையில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) நடக்கிறது.

சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் இந்த மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் சென்னை வந்துள்ளனர்.

இந்த மாநாட்டை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், இங்கிலாந்து நிதித்துறையின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிளாரி லொம்பார்டெலி ஆகியோர் தலைமை தாங்கி நடத்துகின்றனர்.

இன்று தொடங்குகிறது

இந்த மாநாடு குறித்து அனந்த நாகேஸ்வரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜி20 நாடுகளின் நிதி தொடர்பான மாநாடு ஏற்கனவே பெங்களூருவில் நடந்தது. மார்ச் 24 (இன்று), மார்ச் 25 (நாளை) ஆகிய 2 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ள இந்த மாநாடு ஜி20 நாடுகளின் நிதி கட்டமைப்பு தொடர்பான 2-வது மாநாடு ஆகும்.

நாட்டின் மொத்த வருமானம், சேமிப்பு, நுகர்வு, வேலைவாய்ப்பு குறித்த பொருளாதார அணுகுமுறையான மேக்ரோ பொருளாதார பிரச்சினைக்கு இந்த நிதி கட்டமைப்பு மாநாடு முக்கியத்துவம் அளிக்கிறது.

இந்த மாநாட்டில் ஜி20 நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ள நாடுகள், பல்வேறு சர்வதேச மற்றும் மண்டல அமைப்புகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

சவால்களுக்கு தீர்வு

உணவு, எரிசக்தி, பருவநிலை மாற்றம், நிதி பரிமாற்ற பாதைகள் போன்றவை குறித்து கூட்டத்தில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் எடுத்துரைக்கின்றனர். இதன்மூலம் ஒவ்வொரு நாடுகளும் உணவு, எரிசக்தி போன்ற ஒவ்வொரு தலைப்பிலான பிரச்சினைகளில் எதுபோன்ற சவால்களை சந்தித்து வருகின்றன,

அந்த சவால்களுக்கு ஒவ்வொரு நாடுகளும் எவ்வாறு தீர்வு கண்டு வருகின்றன, இந்த தீர்வுகளை இதர நாடுகளும் பின்பற்றலாமா, அதற்கு அந்தந்த நாடுகளுக்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

கலாசாரத்தை அறிய ஏற்பாடு

இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12, 13 ஆகிய தேதிகளில் வாஷிங்டனில் நடைபெறும் பல்வேறு நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் கூட்டத்தில் தெரியப்படுத்தப்படும்.

தமிழகத்தின் கலாசாரம், பண்பாடு போன்றவை குறித்து மாநாட்டில் பங்குபெறும் பிரதிநிதிகள் அறிந்து கொள்ளும் வகையில் இரவு உணவின் போது பல்வேறு நிகழ்வுகள் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறை இயக்குனர் ஜிஜேந்திரசிங் ராஜே, சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையத்தின் இயக்குனர் அண்ணாத்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story