நடுக்கடலில் துப்பாக்கி சூடு; குமரி மீனவர் காயம்


நடுக்கடலில் துப்பாக்கி சூடு; குமரி மீனவர் காயம்
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:46 PM GMT)

சவுதி அரேபியா கடலில் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் குமரி மீனவர் படுகாயம் அடைந்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

சவுதி அரேபியா கடலில் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் குமரி மீனவர் படுகாயம் அடைந்தார்.

கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (வயது 37). இவர் சவுதி அரேபியா நாட்டில் காலம் ஹஸ்ஸான் என்ற அரேபிய முதலாளியிடம் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கத்திப் என்ற பகுதியிலிருந்து "ரஸ்மா அல் அவல்" என்ற விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். அப்போது அவருடன் குமரி மாவட்டத்தில் உள்ள சின்னமுட்டத்தை சேர்ந்த பிரிட்டோ, செபாஸ்டின், பெரியகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த கபிலன், திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் ஆகியோரும் சென்றனர்.

அவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஈரான் கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். உடனே துப்பாக்கி சூட்டுக்கு பயந்து மீனவர்கள் ஒவ்வொருவரும் படகுகளுக்குள் பதுங்கினர். துப்பாக்கியால் சுடும் சத்தம் ஓய்ந்த பின்பு மீனவர்கள் படகுக்கு வெளியே வந்து பார்த்தனர். அங்கு தங்களோடு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராஜேஷ் குமாரின் இடது கண்ணிலும், காது, தொண்டை பகுதிகளிலும் குண்டடி பட்டு மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

உடனே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜேஷ்குமாரை சக மீனவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்க தங்கள் விசைப்படகை கரையை நோக்கி செலுத்தினர்.

அதே சமயம் சவுதி அரேபியா கடலோர காவல் படையினரையும் உதவிக்கு வருமாறு வயர்லெஸ் மூலம் அழைத்தனர். அதைத்தொடர்ந்து சவுதி அரேபியா கடலோர காவல் படை கப்பல் வந்தது. அந்த கப்பலில் ராஜேஷ்குமாரை ஏற்றி சென்று மவுசட் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

துப்பாக்கி சூடு நடந்த படகில் மீன் பிடிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய ஜி.பி.எஸ்., எக்கோ சவுன்டர், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், மீனவர்களின் செல்போன்கள் அனைத்தையும் ஈரான் கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

குடும்பத்தினர் கவலை

துப்பாக்கிசூடு சம்பவத்தில் காயம் அடைந்த ராஜேஷ்குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியும், மிகுந்த கவலையும் அடைந்துள்ளனர். விரைவில் அவர் நலமடைய பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சவுதி அரேபியா நாட்டில் தரின், கத்திப், ஜிபைல் போன்ற இடங்களில் மீன்பிடி தொழில் செய்யும் சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்த இந்திய மீனவர்கள் அனைவரும் தங்கள் உயிருக்கு பயந்தும், எந்த நேரமும் ஈரான் கடற்கொள்ளையர்களால் தங்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாகக்கூறியும் கடந்த மாதம் 23-ந் தேதி முதல் ஒன்பது நாட்களாக கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் உயிருக்கான பாதுகாப்பை சவுதி அரேபியா அரசு உறுதி செய்யும் வரை தாங்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என்றும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.


Next Story