காங்கயம் இனமாடுகள் ரூ.27 லட்சத்துக்கு விற்பனை


காங்கயம் இனமாடுகள் ரூ.27 லட்சத்துக்கு விற்பனை
x
திருப்பூர்

முத்தூர், செப்.26-

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.27 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

மாட்டுத்தாவணி

நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடந்த சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள் வளர்ப்போர், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து விற்பனைக்காக கொண்டு வந்த காங்கயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், மயிலை பூச்சி காளைகள், மயிலை பசுமாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

ரூ.27 லட்சத்துக்கு விற்பனை

இந்த சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 80 மாடுகள் கொண்டு வரப்பட்டதில் 60 மாடுகள் ரூ. 27 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்படி சந்தையில் அதிகபட்சமாக 9 மாத சினையுடன் காங்கயம் இன மயிலை பசுமாடு ரூ.75 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் கடந்த 3 மாத காலமாக பழையகோட்டை மாட்டுத்தாவணி சந்தையில் பசுமாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Next Story