பந்தலூர் அருகே சிறுத்தைகள் தாக்கி 3 ஆடுகள் சாவு


பந்தலூர் அருகே சிறுத்தைகள் தாக்கி 3 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

பந்தலூர் அருகே சிறுத்தைகள் தாக்கி 3 ஆடுகள் இறந்தன.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே சிறுத்தைகள் தாக்கி 3 ஆடுகள் இறந்தன.

ஆட்டை கடித்துக்கொன்றது

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே நாயக்கன்சோலை பகுதியை சேர்ந்தவர் பன்னீர். ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு கொட்டகையில் ஆடுகள் கூச்சலிடும் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தார்.

அப்போது சிறுத்தை ஒன்று ஆட்டின் கழுத்தை கடித்துக் கொன்று கொண்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு கத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். பொதுமக்கள் வருவதை கண்டதும் சிறுத்தை, ஆட்டை அங்கே போட்டுவிட்டு ஓடிவிட்டது.

கண்காணிப்பு கேமராக்கள்

இதேபோல் எருமாடு அருகே கக்குண்டியில் ஸ்ரீதரன் என்பவரின் ஆட்டுகொட்டகையில் புகுந்து 2 ஆடுகளை மற்றொரு சிறுத்தை தாக்கியது. இதில் அந்த 2 ஆடுகளும் இறந்தன. இதுபற்றி அறிந்ததும் சேரம்பாடி வனவர் ஆனந்த், வனகாப்பாளர்கள் ஞானமூர்த்தி, மணிகண்டன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்அனிப்பா, சேரங்கோடு ஊராட்சி துணைதலைவர் சந்திரபோஸ் மற்றும் வனத்துறையினர் சென்று பார்வையிட்டனர். கால்நடை டாக்டர்கள் சரண்யா, நவீன் ஆகியோர் அங்கு சென்று, இந்த ஆடுகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர். சிறுத்தைகள் நடமாட்டத்தை கண்காணிக்க 2 கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் பொருத்தி உள்ளார்கள்.

இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளதோடு, வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வெண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Next Story