மதுரையில் நடுரோட்டில் இளம்பெண் படுகொலை


மதுரையில் பட்டப்பகலில் இளம்பெண் நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்டார். அவரை காதலித்து திருமணம் செய்த கணவர் தான் ஹெல்மெட் அணிந்து வந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசில் அவர் சரண் அடைந்தார்.

மதுரை

மதுரையில் பட்டப்பகலில் இளம்பெண் நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்டார். அவரை காதலித்து திருமணம் செய்த கணவர் தான் ஹெல்மெட் அணிந்து வந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசில் அவர் சரண் அடைந்தார்.

காதல் திருமணம்

மதுரை தெற்குவாசல் சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம், நகை செய்யும் தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள்.

அதில், 2-வது மகள் வர்ஷா (வயது 19). பிளஸ்-2 முடித்துவிட்டு தட்டச்சு பயிற்சிக்கு சென்றுவந்தார்.

இந்த நிலையில், கீரைத்துறையை சேர்ந்த எம்.பி.ஏ. மாணவர் பழனியை(25), வர்ஷா காதலித்துள்ளார். 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டு வசித்து வந்தனர். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

40 நாள் மண வாழ்க்கை

திருமணம் முடிந்த 40 நாளில் கணவரிடம் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வர்ஷா வந்துவிட்டார். 3 நாட்களுக்கு பிறகு மனைவியை தேடி அவரது வீட்டுக்கு பழனி சென்றார். தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அவருடன் செல்ல வர்ஷா மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சினை இருந்துவந்தது.

இதுகுறித்து வர்ஷாவின் பெற்றோர், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது இருவரும் கோர்ட்டு மூலம் விவாகரத்து பெற்று பிரிந்துவிடுகிறோம் என்று போலீசார் முன்னிலையில் எழுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்.

நடுரோட்டில் கொலை

அதன்பின்னர் பெற்றோர் வீட்டில் வசித்துவந்த வர்ஷா, தட்டச்சு பயிற்சிக்கு சென்று வந்தார். அவர் வீட்டில் இருந்து வெளியில் வரும் நேரத்தில், பழனி அவரிடம் பேச முயன்றுள்ளார். ஆனால், கணவருடன் பேசாமல் அவர் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் வர்ஷா, சப்பாணி கோவில் தெருவில் உள்ள ஒரு கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த பழனி, அவரை வழிமறித்து ேபச முயன்றபோது மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பழனி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நடுரோட்டில் வர்ஷாவின் கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். வர்ஷா அலறல் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள், பழனி மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார்.

உயிருக்கு போராட்டம்

ரத்தவெள்ளத்தில் நடுரோட்டில் வர்ஷா உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காட்சி அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. தகவல் அறிந்து அவருடைய குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் பதறியபடி ஓடிவந்தனர்.

வர்ஷாவை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே வர்ஷா இறந்துவிட்டது தெரியவந்தது.

பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை குறித்து தகவல் அறிந்ததும் தெற்குவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வர்ஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் வர்ஷாவின் கணவர் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்து, அவரிடம் தகராறு செய்ததும், கத்தியால் சரமாரியாக குத்தியதும் பதிவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து, தப்பிச்சென்ற பழனியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

போலீசார் தகவல்

இதுசம்பந்தமாக போலீசார் கூறும்போது, "வர்ஷாவின் குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், பழனியும் கல்லூரியில் ஒன்றாக படித்தபோது அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் வர்ஷாவும் பழனிக்கு அறிமுகம் ஆகி இருக்கிறார்.

நாளடைவில் காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பழனியின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவரை விட்டு பிரிந்தார். அந்த நேரத்தில் ஆசைவார்த்தை கூறி வர்ஷாவை தனது காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார். பின்னர் அவரை அழைத்துச்சென்று திருமணம் செய்ததுடன் அவருடனும் தகராறு செய்ததால், வர்ஷாவும் பிரிந்திருக்கிறார். இந்த நிலையில் மனைவியை நடுரோட்டில் பழனி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது" என்று கூறினர்.

சரண் அடைந்தார்

போலீசாரால் தேடப்பட்டு வந்த பழனி நேற்று இரவில் கீரைத்துறை போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story