இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது


இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது
x
திருப்பூர்


திருப்பூரில் குடிபோதையில் இளம்பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

குடும்பத்தகராறு

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 26). இவர் வெண்ணிலா (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2½ மற்றும் 1½ வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் வசித்து வந்தார்.

மேலும் அவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சந்தோசுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இறந்து கிடந்தார்

இந்த நிலையில் வெண்ணிலா நேற்று முன் தினம் இரவு வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெண்ணிலா எப்படி இறந்தார் என்று அவரது கணவர் சந்தோஷிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் குடும்பத் தகராறில் தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து போலீசார் சந்தோசை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் நேற்று முன் தினம் இரவு சமையல் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சந்தோஷ் குடிபோதையில் வெண்ணிலாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

கணவன் கைது

மேலும் வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சந்தோசை கைது செய்தனர்.

திருப்பூரில் குடும்பத்தகராறில் 2 குழந்தைகளின் தாயை கணவனே கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story