பிரம்மோற்சவ விழாவையொட்டி காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் தேரை சுத்தம் செய்யும் பணி தீவிரம்


பிரம்மோற்சவ விழாவையொட்டி காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் தேரை சுத்தம் செய்யும் பணி தீவிரம்
x

பிரம்மோற்சவ விழாவையொட்டி காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் தேரை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் 10 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறும் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா வருகிற 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 6-ந்தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேரோட்டத்தையொட்டி காஞ்சீபுரம் காந்தி ரோடு தேரடி பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள தேரின் சக்கரம், ஹைட்ராலிக் பிரேக் நல்ல நிலையில் உள்ளதா? தேரில் வேறு ஏதாவது பழுது இருப்பின் அதனை சரி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தேரை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

73 அடி உயரமும், அழகிய பல சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய 7 அடுக்கு நிலைகளை கொண்ட இந்த தேரை காஞ்சீபுரம் தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை தேரின் மீது பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர். வைகாசி பிரம்மோற்சவத்தை யொட்டி காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திரு வீதிஉலா வருவார். வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு காஞ்சீபுரம் மாநகரப்பகுதியில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story