ஆன்லைன் சூதாட்டத்துக்கு மற்றொரு உயிர் பலி: மணலி ஆட்டோ டிரைவர் தற்கொலை


ஆன்லைன் சூதாட்டத்துக்கு மற்றொரு உயிர் பலி: மணலி ஆட்டோ டிரைவர் தற்கொலை
x

ஆன்லைனில் சூதாடி பணத்தை இழந்த ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மணலி,

சென்னை மணலி எம்.ஜி.ஆர். நகர் கால்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 26). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி துர்கா. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.

பார்த்திபன், ஆன்லைனில் சூதாடும் பழக்கம் உடையவர். இதனால் ஆன்லைன் சூதாடி அதிகளவில் பணத்தை இழந்து விட்டார். மேலும் மனைவி துர்கா, மகளிர் சுயஉதவி குழு மூலம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி கொடுத்தார். அதனையும் பார்த்திபன் திருப்பி கொடுக்கவில்லை.

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் பார்த்திபனுக்கு கடன் தொல்லை அதிகமாகியது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு அவரை தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்கள்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் பார்த்திபன் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். நேற்று முன்தினம் தனது மனைவி துர்காவை அவரது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் அனுப்பிவைத்தார். இரவு வீட்டில் தனியாக இருந்த பார்த்திபன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மணலி போலீசார், தற்கொலை செய்த பார்த்திபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த்னர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story