நெய்வேலி என்.எல்.சி. பிரச்சினையில் இருவேறு கொள்கை:தி.மு.க., விவசாயிகளுக்கு எதிரான கட்சிடாக்டர் அன்புமணி ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு


நெய்வேலி என்.எல்.சி. பிரச்சினையில் இருவேறு கொள்கை:தி.மு.க., விவசாயிகளுக்கு எதிரான கட்சிடாக்டர் அன்புமணி ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு
x

நெய்வேலி என்.எல்.சி. பிரச்சினையில் இருவேறு கொள்கையில் இருப்பதாகவும், தி.மு.க., விவசாயிகளுக்கு எதிரான கட்சி என்றும் குறிஞ்சிப்பாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. குற்றம்சாட்டினார்.

கடலூர்

குறிஞ்சிப்பாடி,

பா.ம.க. பொதுக்கூட்டம்

கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் நீர், நிலம், விவசாயம் காப்போம் விளக்க பொதுக்கூட்டம் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தடா.தட்சிணாமூர்த்தி வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் கோ.ஜெகன், மாவட்ட செயலாளர்கள் செல்வ.மகேஷ், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி, மாநில அமைப்பு தலைவர் பழ.தாமரைக்கண்ணன், முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் காட்டுக்கூடலூர் வேங்கை சேகர், வடக்கு மாவட்ட தலைவர் நவீன்பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-

வேலைவாய்ப்பு அளிக்கவில்லை

வளமாக இருந்த கடலூர் மாவட்டம் சீரழிந்து வருகிறது. கடலூர் சிப்காட் பகுதியில் ரசாயன கழிவுகள் அதிகமாக இருந்தது. இதை கண்டித்து பா.ம.க. போராட்டம் நடத்தியதன் காரணமாக தற்போது அங்கு ஓரளவு சீரமைக்கப்பட்டுள்ளது. மண், நீர், நிலம் மாசுபட்டு வருகிறது. அடுத்ததாக நெய்வேலியில் 66 ஆண்டுகளாக இருக்கும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தன்னுடைய லாபத்தை வட மாநிலங்களில் முதலீடு செய்துள்ளது.

கடலூர் மாவட்ட மக்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் அளிக்கவில்லை. இதே போல் பரங்கிப்பேட்டையில் சைமா தொழிற்சாலை வர இருக்கிறது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கத் தான் உங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம். 8 அடியில் கிடைத்த தண்ணீர் தற்போது ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டது. தற்போது என்.எல்.சி. நிறுவனம் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த துடிக்கிறது. என்.எல்.சி.க்கு 2 அமைச்சர்கள் தரகராக செயல்பட்டு வருகிறார்கள்.

புதிய வீராணம் திட்டம்

1956-ம் ஆண்டு தொடங்கப்பட்ட போது என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 37 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியது. இதனால் 25 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. இது என்.எல்.சி. பகுதியை சுற்றியுள்ள 49 கிராம மக்களின் பிரச்சினை இல்லை. ஒட்டுமொத்த கடலூர் மாவட்ட மக்களின் பிரச்சினை ஆக உள்ளது.

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த மக்களுக்கு 2 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு கொடுக்கப் போகிறார்களாம். ஆனால் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை 2025-ம் ஆண்டுக்குள் தனியாருக்கு விற்க போவதாக மத்திய அரசே தெரிவித்து விட்டது. அப்படி இருக்கும்போது எப்படி வேலை வாய்ப்பு வழங்குவார்கள். இது மட்டுமில்லாமல் தற்போது புதிய வீராணம் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

200 இடங்களில் ஆய்வு

இந்த திட்டத்தால் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஒன்றிய பகுதியிலுள்ள விளை நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி. நிர்வாகம் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்துள்ளது. அவர்கள் 200 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் நிலக்கரி இருப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். விரைவில் அந்தப் பகுதியிலும் நிலக்கரி எடுக்க போகிறார்கள்.

ஏற்கனவே வீராணம் ஏரியை சுற்றியுள்ள காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆட்சியில் அறிவித்தார்கள். ஆனால் தற்போது அப்பகுதியில் உள்ள நிலங்களை எடுக்க துடிக்கிறார்கள். காலநிலை மாற்றத்தால் பருவமழை குறைந்து வருகிறது.

விவசாயிகள் போராட வருவதில்லை

என்.எல்.சி. பிரச்சினை குறித்து போராட்டம் நடத்த விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தால் அவர்கள் வருவதில்லை. எந்த கட்சிகளும் வரவில்லை. காலநிலை மாற்றத்தால் மிகப்பெரிய வறட்சி ஏற்படும். வறட்சியால் உணவு பற்றாக்குறை ஏற்படும். ஆகவே ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டது போல் கடலூர் மாவட்டத்திலும் இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்த வரவேண்டும்.

டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்தும் விவசாயிகள் கடலூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை பறிக்க துடிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஏன் போராட்டம் நடத்த வரவில்லை. என்.எல்.சி. நிர்வாகம் 1983-ம் ஆண்டில் கையகப்படுத்திய 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வெட்டி எடுத்தாலே இன்னும் 40 ஆண்டுகள் நிலக்கரி எடுக்கலாம். பிறகு எதற்கு 25 ஆயிரம் ஏக்கர் நிலம். ஆகவே இந்த நிர்வாகம் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டோம். இதை கண்டித்து தொடர் போராட்டம் நடத்துவோம். இதில் விவசாயிகள், அனைத்துக் கட்சிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

தி.மு.க. விவசாயிகளுக்கு எதிரான கட்சி

விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போட வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கடந்த 16 ஆண்டுகளாக வேளாண்மைக்கு நிழல் நிதிநிலை அறிக்கையை பா.ம.க. தாக்கல் செய்து வருகிறது. ஆனால் தற்போது தான் தி.மு.க. விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் அறிவித்துள்ளது. ஆனால் நெய்வேலி என்.எல்.சி. பிரச்சினையில் இரு வேறு கொள்கைகளை தி.மு.க. கொண்டுள்ளது தி.மு.க. விவசாயிகளுக்கு எதிரான கட்சி என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தனது கொள்கையை தெளிவுப்படுத்த வேண்டும். சிப்காட், என்.எல்.சி., சைமா, வீராணம் திட்டம் போன்றவற்றால் விவசாயிகள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு தி.மு.க. அரசு தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறேன்.

ஆகவே இங்குள்ள அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், என்.எல்.சி. நிர்வாகத்துக்கு நிலம் எடுப்பதை விட்டு விடுங்கள். என்.எல்.சி. நிர்வாகம் இந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டும். அதுவரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராக இருங்கள். விரைவில் இது பற்றி அறிவிக்கிறேன்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கடலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகரன், மாநில மாணவர் சங்க தலைவர் கோபிநாத், செயலாளர் விஜயவர்மன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.பி. வெங்கடேசன், தனசேகர், இளைஞர் சங்க மாவட்ட தலைவர் ரத்தினவேல், தொழிற்சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் சிவ.ரமேஷ், துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட அமைப்பு செயலாளர் ஸ்டாலின், மாணவர் சங்கம் ஏ.சி.மணி, கடலூர் மாநகர அமைப்பு தலைவர் மதி, மாநகராட்சி கவுன்சிலர் ஏர்டெல் சரவணன், ஒன்றிய, நகர செயலாளர்கள் சுதாகர், ஆனந்தராஜ், சோழன், சகாதேவன், பாலு, பிரேம்குமார், செந்தில்முருகன், புஷ்பராஜ், நடராஜ், வீரமணி, பிரபாகரன், வினோத், கோபால், தயாளன், விஜய், ஆனந்த், பால்ராஜ், ராமலிங்கம், விஜய், செல்வம் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story