டாஸ்மாக் பார் ஊழியருக்கு அரிவாள் வெட்டு:2 பேர் கைது


தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:47 PM GMT)

தூத்துக்குடியில் டாஸ்மாக் பார் ஊழியரை அரிவாளால் வெட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மதுபானம் இல்லை என்ற கூறியதால் ஆத்திரமடைந்து டாஸ்மாக் பார் ஊழியரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பார் ஊழியர்

தூத்துக்குடி காந்திநகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 52). இவர் இந்திய உணவுக்கழக குடோன் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு டாஸ்மாக் கடையை மூடிய பிறகு, ஊழியர் செல்வக்குமார் நின்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு கோரம்பள்ளத்தை சேர்ந்த கோயில்ராஜ் (48), அந்தோணியார்புரத்தை சேர்ந்த துரை (31) ஆகியோர் வந்தனர். அவர்கள் செல்வக்குமாரிடம் மதுபானம் கேட்டு உள்ளனர். ஆனால் கடை மூடப்பட்டு விட்டதால் மதுபானம் தரவில்லை என்று கூறப்படுகிறது.

அரிவாள் வெட்டு

இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கோயில்ராஜ், துரை ஆகிய 2 பேரும் சேர்ந்து மறைத்து வைத்து இருந்த அரிவாளால் செல்வக்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனராம். இதில் பலத்த காயம் அடைந்த செல்வக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ேசர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகராறில் காயம் அடைந்த கோயில்ராஜூம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

2 பேர் கைது

இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோயில்ராஜ், துரை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story