நிலத்தை கையகப்படுத்தியதற்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்கள் ஜப்தி


நிலத்தை கையகப்படுத்தியதற்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்கள் ஜப்தி
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:46 PM GMT)

நிலத்தை கையகப்படுத்தியதற்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் மாந்தோப்பு தெரு பகுதியை சேர்ந்தவர் ஷேக் காதர்அலி (வயது 65). இவருக்கு சொந்தமாக விழுப்புரம் சாலாமேடு பகுதியில் 2½ ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தை 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், குடியிருப்புகள் கட்டுவதற்காக கையகப்படுத்தியது. இதற்காக சதுர அடிக்கு 2 ரூபாய் என வீட்டுவசதி வாரியம் நிர்ணயம் செய்தது.

இந்த தொகை குறைவாக உள்ளதாகவும், சதுர அடிக்கு 25 ரூபாயாக உயர்த்தி வழங்கக்கோரியும் கடந்த 2002-ம் ஆண்டில் ஷேக் காதர்அலி, விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது சதுர அடிக்கு 2 ரூபாய்தான் வழங்க முடியும், அதற்கு மேல் வழங்க முடியாது என்று வீட்டுவசதி வாரியம் கூறியது.

இழப்பீடு

இதையடுத்து ஷேக் காதர்அலி, சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் ஷேக் காதர்அலியின் நிலத்திற்கு சதுர அடிக்கு 16 ரூபாய் வரை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று வீட்டுவசதி வாரியத்திற்கு உத்தரவிட்டது.

இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்படி மனுதாரர் ஷேக் காதர்அலிக்கு இழப்பீட்டு தொகையாக வட்டியுடன் சேர்த்து ரூ.24 லட்சத்து 89 ஆயிரத்து 28-ஐ வீட்டுவசதி வாரியம் வழங்க வேண்டுமென்றும், இத்தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்கவில்லையெனில் அத்தொகைக்கு ஈடாக வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துக்களான 5 கணினிகள், 10 இரும்பு அலமாரிகள், 10 மின்விசிறிகள், 10 மேஜைகள், பீரோக்கள் மற்றும் மாவட்ட கலெக்டரின் வாகனம் ஆகியவை ஜப்தி செய்யப்படும் என்று நீதிபதி விஜயகுமார், கடந்த 19-ந் தேதியன்று உத்தரவிட்டார். ஆனால் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகும் ஷேக் காதர்அலிக்கு வீட்டுவசதி வாரியம் உரிய இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை.

ஜப்தி

இந்நிலையில் நேற்று விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு மனுதாரருடன் வக்கீல்கள் தனராஜன், ராஜகுமாரன், நீதிமன்ற முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் ராஜி ஆகியோர் சென்று அங்கிருந்த கணினிகள், இரும்பு அலமாரிகள், மின்விசிறிகள், மேஜைகள், பீரோக்கள் ஆகியவற்றை ஜப்தி செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story