அரசு விழாவில் தேசிய கீதம் ஒலிக்கும் போது செல்போனில் பேசிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்-நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு


அரசு விழாவில் தேசிய கீதம் ஒலிக்கும் போது செல்போனில் பேசிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்-நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:47 PM GMT)
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் அருகே அரசு விழாவில் தேசிய கீதம் ஒலிக்கும் போது செல்போன் பேசிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அரசு விழா

நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டை மேட்டில் கடந்த 28-ந் தேதி தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

விழாவில் அரசுத்துறை உயர் அதிகாரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்

விழாவின் இறுதியில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். விழா மேடையின் மிக அருகே நாற்காலியில் அமர்ந்தபடியே நாமக்கல் ஆயுதப்படையை சேர்ந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

தேசிய கீதம் ஒலிப்பதை கூட அறியாமல் மெய்மறந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்த சிவப்பிரகாசத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து தேசிய கீதத்தை மதிக்காமல் ஒய்யாரமாக அமர்ந்து செல்போன் பேசிக்கொண்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசத்தை பணி இடைநீக்கம் செய்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டு உள்ளார்.

பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் புகார் எழுந்ததை தொடர்ந்து, ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story