அமராவதி ஆற்றுக்கு கம்பம் அனுப்பும் நிகழ்ச்சி கோலாகலம்


அமராவதி ஆற்றுக்கு கம்பம் அனுப்பும் நிகழ்ச்சி கோலாகலம்
x

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அமராவதி ஆற்றுக்கு கம்பம் அனுப்பும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கரூர்

கரூர் மாரியம்மன் கோவில்

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக கரூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற தலமாக இருக்கிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாத உற்சவ திருவிழா வெகுவிமா்சையாகவும், கோலாகலமாகவும் நடைபெறுகிறது.

இதனையொட்டி கோவில் முன்பு மூன்று கிளைகள் உடைய வேப்பமர கம்பத்தினை நட்டு வைத்து தினமும் பக்தர்கள் பால், புனிதநீர் ஊற்றி வழிபாடு நடத்துவதும், பின்னர் அந்த கம்பத்தினை ஆற்றுக்கு கொண்டு போய் விடுவதும் சிறப்பு வாய்ந்ததாகும். இதில் கலந்து கொள்ள திரளான பக்தர்கள் கரூருக்கு வருகை தருவதால் கம்பம் விடும் நாளில் கரூர் மாநகரம் களை கட்டும்.

கம்பத்தை நட்டு வழிபாடு

அந்த வகையில் இந்த ஆண்டு கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கடந்த 14-ந்தேதி கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்றைய தினம் மூன்று கிளைகளுடைய வேப்பம் கம்பினை பாலம்மாள்புரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் வைத்து, சிறப்பு பூஜா செய்யப்பட்டது. பின்னர் அன்று மாலை அமராவதி ஆற்றில் கம்பத்திற்கு வேப்பிலைகள், பூக்கள் உள்ளிட்டவற்றை கட்டி பூஜை செய்து, அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து, கோவிலில் கம்பம் நட்டு வைக்கப்பட்டது. பின்னர் தினமும் பக்தர்கள் பால்குடம் மற்றும் புனித நீர் எடுத்து வந்து கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். கடந்த 19-ந்தேதி கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் 47 பூத்தட்டுகளை எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து பூஜை செய்தனர். பின்னர் 21-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 29-ந்தேதி தேரோட்டமும் நடந்தது. கடந்த 28-ந்தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை பிரார்த்தனை நாட்களாக கடைப்பிடிக்கப்பட்டன.

அம்மனுக்கு சிறப்பு பூஜை

அதன்படி கடந்த 28-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், உடலில் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும், மாவிளக்கு எடுத்தும், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து வந்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழாவையொட்டி நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து திரளான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்திற்கு பால்குடம் மற்றும் புனித நீர் ஊற்றி அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து மதியம் 1 மணி வரை பக்தர்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து கோவிலை சுற்றி புனிதநீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் கோவிலில் உள்ள கம்பத்திற்கு வேப்பிலை மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

ஊர்வலம்

இதனைத்தொடர்ந்து கம்பத்தை ஆற்றுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. பக்தர்கள் கோவிலின் முன்புற பகுதியில் கம்பத்தை வழியனுப்ப திரண்டு நின்றனர். மாலை 5.15 மணியளவில் அம்மன் சன்னதி எதிரே இருந்த கம்பத்தை எடுத்து பூசாரி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அப்போது விண்ணதிர மேளதாள வாத்தியங்கள் முழங்கின. கோழிகள் பறக்க விடப்பட்டன.

இதைத்தொடர்ந்து கோவிலின் முன்புறம் இருந்த அலங்கரிக்கப்பட்ட ரதத்தினுள் கம்பம் வைக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் பூவினை கம்பத்தின் மீது தூவினர். பின்னர் அரிவாளை பிடித்துக் கொண்டு காவல் தெய்வம் மாவடி ராமசாமி முன்னே செல்ல அதனை தொடர்ந்து கம்பம் பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக வந்தது.

தேங்காய் உடைத்து வழிபாடு

அப்போது ஜவகர் பஜார் வீதியில் வழிநெடுகிலும் பக்தர்கள் தாம்பூலக்கூடையில் வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து கம்பத்திற்கு தேங்காய் உடைத்து பூஜை செய்தனர். பின்னர் தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பூசாரி ஆசி வழங்கி திருநீறு பூசினார். அம்மனின் கம்பத்தை ஆற்றுக்கு அனுப்பி வைக்கும் ஆனந்தத்தில் சிலர் அருள் வந்து சாமி ஆடியதையும் காண முடிந்தது.

கூட்டம் கட்டுக்கடங்காமல் முண்டி அடித்து வந்ததால் போலீசார் கம்பத்தின் அருகே கயிறு மூலம் தற்காலிக தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி விடக்கூடாது என்பதற்காக போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து கொண்டே வந்தனர்.

ஆற்றில் விடப்பட்ட கம்பம்

கம்பமானது இரவு 7 மணியளவில் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையை அடைந்தது. அப்போது பக்தர்கள் ஓம் சக்தி தாயே... பராசக்தி தாயே... என கோஷம் எழுப்பி கம்பத்தை தொட்டு வணங்கினர். இதற்கிடையே அங்குள்ள மணல் திட்டில் கம்பம் நடப்பட்டு அதன் மீது மஞ்சள், குங்குமம் தூவி பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து இரவு 7.18 மணியளவில் அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் உள்ள புனிதநீரில் கம்பத்தை விட்டு மூழ்கடித்தனர்.

பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் கம்பம் விடப்பட்ட இடத்தில் பயபக்தியுடன் வணங்கி சென்றனர். பின்னர் அமராவதி ஆற்றில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

போலீசார் பாதுகாப்பு

விழாவையொட்டி கரூா் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் திருச்சி, அாியலூா், ெபரம்பலூர், கரூர் உள்பட பல்ேவறு 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில் பகுதியில் இருந்து கம்பம் ஊர்வலமாக சென்ற இடம் வரையும், அமராவதி ஆற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாரியம்மன் கோவில், அமராவதி ஆறு, ஜவகர் பஜார் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

மேலும் நேற்று கரூர் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியில் கரூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்காக பக்தர்கள் கலந்து கொண்டதால் கரூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மது விலக்கு மற்றும் ஆயத்தீா்ைவத்துறை அமைச்சர் வி.ெசந்தில்பாலாஜி, எம்.எல்.ஏக்கள் இளங்கோ, மாணிக்கம், தி.மு.க. மாநகர செயலாளர் அன்பரசன், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, கரூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி, அ.தி.மு.க. கவுன்சிலர் ஆண்டாள் தினேஷ், கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் பாலமுருகன், பழனிமுருகன் ஜூவல்லரி பாலமுருகன்.

அக்னீஸ்வரா கேஸ் ஏஜென்சி கார்த்திகேயன், ஏசியன் பேப்ரிக்ஸ் வெங்கடாசலம், ஹாலிவுட் சரவணன், காங்கிரஸ் கவுன்சிலர் ஸ்டீபன் பாபு, வி.கே.ஏ.பால் கருப்பண்ணன், வெற்றிவேல் புரோமோட்டர்ஸ் ரவிச்சந்திரன், கரூர் மாவட்ட காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் லியோ சதீஸ், கல்யாண சக்கரவர்த்தி கேஸ் அங்கமுத்து, ஜி.பி.ஆர். எண்டர்பிரைசஸ் சிவசங்கர், ஸ்ரீ வித்யா பிளைவுட்ஸ் ஜவகர், சேரன் பழனிசாமி உள்பட பலா் கலந்து கொண்டனர்.


Next Story