ஆட்டுக்கொல்லி நோயை தடுக்க ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்-ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்


ஆட்டுக்கொல்லி நோயை தடுக்க ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்-ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:46 PM GMT)
நாமக்கல்

நாமக்கல்:

ஆட்டுக்கொல்லி நோயை தடுக்க ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை. நாளை (வியாழக்கிழமை) 3 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 6 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 84.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 62.6 டிகிரியாகவும் இருக்கும்.

காற்று மணிக்கு முறையே 6, 8, 10 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சம் 30 சதவீதமாகவும், அதிகபட்சம் 90 சதவீதமாகவும் இருக்கும்.

ஆட்டுக்கொல்லி நோய்

தமிழ்நாட்டில் ஆட்டுக்கொல்லி நோய் ஆண்டு முழுவதும் காணப்படுகிறது. இந்த நச்சுயிரி, நோய் கிருமி உள்ள ஆடுகளின் கண்ணீர், சளி, உமிழ்நீர் மற்றும் சானம் ஆகியவற்றின் மூலம் வெளியேறுகிறது. விழாக்கள் மற்றும் சந்தைகளில் மிக நெருக்கமாக இருக்கும் போது பாதிக்கப்பட்ட ஆடுகளிடம் இருந்து மற்ற ஆடுகளுக்கும் இந்த நோய் பரவ அதிகம் வாய்ப்பு உள்ளது.

புதிதாக வாங்கி மந்தைகளில் சேர்க்கப்படும் ஆடுகள் மூலமாகவும், ஆட்டுக்கொல்லி நோய் பரவும். திடீரென்று ஏற்படும் கடுமையான காய்ச்சல், மிகவும் சோர்வடைதல், தீவனம் உட்கொள்ளாமை போன்றவை இதன் அறிகுறியாகும். ஆரம்பத்தில் மூக்கிலிருந்து நீர் போன்ற சளி வடியும். பின்னர் அது கட்டியாக சீல் போன்று உறைவதால், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.

தடுப்பூசி

பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு துர்நாற்றத்துடன் கூடிய கழிச்சல் ஏற்படும். இளம் ஆடுகள் இந்த நோயால் மிக கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இந்த நோய்க்கான தடுப்பூசியை பருவமழைக்கு முன்னர் செலுத்த வேண்டும்.

முதலில் 4 மாதங்கள் மற்றும் அதற்கு மேலான ஆடுகளுக்கு தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும். பிறகு ஆண்டுக்கு ஒருமுறை எல்லா ஆடுகளுக்கும் மறு தடுப்பூசி போடப்பட வேண்டும். இறுதி சினை பருவம் உள்ள ஆடுகள் மற்றும் பால் கொடுக்கும் ஆடுகளை தவிர்க்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story