ஞானபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா


ஞானபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:46 PM GMT)

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா மற்றும் ஆதீன குரு முதல்வர் குருபூஜை விழா, ஆதீனத்தின் பட்டணப்பிரவேச பல்லக்கு வீதியுலா ஆகியவை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா மற்றும் ஆதீன குரு முதல்வர் குருபூஜை விழா, ஆதீனத்தின் பட்டணப்பிரவேச பல்லக்கு வீதியுலா ஆகியவை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வைகாசி பெருவிழா

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த விழாவில் மிகமுக்கிய நிகழ்வான ஆதீன கர்த்தர் பல்லக்கில் வீதியுலா செல்லும் நிகழ்வு 11- வது நாள் நடைபெறும். அந்த விழாவின் தொடக்க நாளான நேற்று ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து தருமபுரம் ஆதீனகர்த்தர் முன்னிலையில் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது. வைகாசி பெருவிழாவில் முக்கிய நிகழ்வாக 6-ந் தேதி திருக்கல்யாண வைபவமும், 8-ந் தேதி திருத்தேர் உற்சவமும், 9-ந் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

பட்டண பிரவேசம்

தொடர்ந்து 10-ந் தேதி தருமபுரம் ஆதீனம் 27-வது குருமா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் சிவிகை பல்லக்கில் பட்டண பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்.

பாரம்பரியமாக நடந்து வரும் இந்த பட்டணப் பிரவேச விழாவிற்கு கடந்த ஆண்டு நடத்த தடை விதிக்கப்பட்டு, பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து இந்த விழா குறித்து சர்ச்சைகளும், ஆதரவுகளும் உருவாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story