தாளவாடி மல்லிகார்ஜுனா சாமி கோவிலில் குண்டம் விழா;பூசாரிகள் மட்டுமே தீ மிதித்தனர்


தாளவாடி மல்லிகார்ஜுனா சாமி கோவிலில் குண்டம் விழா;பூசாரிகள் மட்டுமே தீ மிதித்தனர்
x

யுகாதி பண்டிகையையொட்டி மல்லிகார்ஜுனா சாமி கோவிலில் நடந்த குண்டம் விழாவில், பூசாரிகள் மட்டுமே தீ மிதித்தனர்.

ஈரோடு

தாளவாடி

யுகாதி பண்டிகையையொட்டி மல்லிகார்ஜுனா சாமி கோவிலில் நடந்த குண்டம் விழாவில், பூசாரிகள் மட்டுமே தீ மிதித்தனர்.

மல்லிகார்ஜுனா சாமி கோவில்

தாளவாடியில் பிரசித்தி பெற்ற மல்லிகார்ஜுனா சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா நேற்று முன்தினம் இரவு வில்வ அர்ச்சனையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து இரவு சாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

பின்னர் மேளதாளங்களுடன் உற்சவர் அங்குள்ள ஆற்றங்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து அங்கிருந்து சாமி வீதி உலா புறப்பட்டது. வீதி உலாவானது ஒசூர் ரோடு, தலமலை ரோடு, சத்தி ரோடு வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் கோவிலின் 5 பூசாரிகள் மட்டுமே தீ மிதித்தனர். பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மண்டேசாமி கோவில்

இதேபோல் தொட்டகாஜனூர் மண்டேசாமி கோவில் குண்டம் விழா நேற்று முன்தினம் இரவு புலி ஆட்டத்துடன் தொடங்கியது. இதையடுத்து மண்டேசாமி, பீரேஸ்வர சாமி, லட்சுமிதேவி, மாரியம்மன், சவுடேஸ்வரி, மசனம்மாள், ராக்காயி அம்மன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் மேளதாளங்களுடன் வீதி உலாவாக சாமிகள் ஆற்றங்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து ஆற்றங்கரையில் இருந்து சாமிகள் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா எடுத்து செல்லப்பட்டது. அப்போது வழி நெடுகிலும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமிக்கு தேங்காய் பழம் படைத்து வழிபட்டனர். ஆர்.சி. வீதியில் 400 கிலோ பூக்களால் மலர் பாதை அமைக்கப்பட்டு அதில் சாமிகள் வீதி உலா நடைபெற்றது. நேற்று காலை 9 மணி அளவில் சாமிகள் வீதி உலாவாக கோவிலை சென்றடைந்தது.

பூசாரிகள் மட்டும் தீ மிதித்தனர்

இதையொட்டி கோவில் முன்பு 30 அடி நீள குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் கோவிலின் 7 பூசாரிகள் மட்டுமே தீ மிதித்தனர். பக்தர்கள் யாரும் குண்டம் இறங்கவில்லை.

விழாவில் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், மைசூரு, சிக்கொலா, அட்டுகுளிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் இங்கு வந்து சாமியை தரிசனம் செய்து சென்றனர்.

இதையொட்டி தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வடிவேல்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story