'டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதுவது உற்சாகம் அளிக்கிறது' - ஸ்டீவன் சுமித்


டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதுவது உற்சாகம் அளிக்கிறது - ஸ்டீவன் சுமித்
x

ஓவல் மைதானத்தில் குறிப்பிட்ட பகுதியில் சுழற்பந்து வீச்சு எடுபடும் என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார்.

லண்டன்,

2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் வருகிற 7-ந்தேதி (மாலை 3மணி) தொடங்குகிறது. இதில் புள்ளிப் பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதையொட்டி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணி பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆயத்தமாகி வருகிறது.

இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலிய முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித் நேற்று அளித்த ஒரு பேட்டியில், 'டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்க உள்ள ஓவலில் போக போக ஆடுகளத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டு கொஞ்சம் சுழற்பந்து வீச்சு எடுபட வாய்ப்புள்ளது. இந்தியாவில் நாங்கள் எந்த மாதிரி சவாலை எதிர்கொண்டோமோ அதே போன்று இங்கும் சந்திக்க நேரிடலாம். ஒட்டுமொத்தத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கு அற்புதமான ஒரு இடம் ஓவல். நிலைத்து நின்று விட்டால் பேட்டிங் செய்வதற்கு அருமையான இடம். இதே போல் வேகத்துடன் கூடிய பவுன்சும் ஓரளவு இருக்கும்' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், 'இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதுவது உற்சாகம் அளிக்கிறது. நிச்சயம் அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் திரள்வார்கள். அனேகமாக ஆஸ்திரேலியாவை விட இந்திய ரசிகர்களே அதிகமாக இருப்பார்கள். இது சிறப்புமிக்க ஜாலியான ஒரு போட்டியாக இருக்கப்போகிறது. அதை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்' என்றார்.


Next Story