விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் அதிரடி: தொடரை வென்று இந்தியா அசத்தல்..!!


தினத்தந்தி 25 Sep 2022 5:11 PM GMT (Updated: 25 Sep 2022 6:21 PM GMT)

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

ஐதராபாத்,

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வந்தது. டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தநிலையில் இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் களமிறங்கினர். ஒருபுறம் பின்ச் நிதானத்தை கடைபிடிக்க, மறுபுறமோ கிரீன் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டார். 19 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் 52 ரன்னில் அவுட்டானார்.

அவரைத்தொடர்ந்து பின்ச் 7 ரன்னிலும், ஸ்டீவ் சுமித் 9 ரன்னிலும், மேக்ஸ்வெல் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாடிய அணியை டிம் டேவிட் சரிவில் இருந்து மீட்டார். அவரின் அரைசதத்தின் (54) உதவியுடன் ஆஸ்திரேலிய அணி நல்ல ஸ்கோரை எட்டியது.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 3 விக்கெட்டுகளும், புவனேஸ்வர்குமார், சாஹல் மற்றும் ஹர்சல் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் கே.எல்.ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ரோகித் சர்மாவும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக விராட் கோலியுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ரன்களை குவித்ததால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் தனது அரைசதத்தை பூர்த்தி செய்திருந்தநிலையில் 69 (36) ரன்களில் கேட்ச் ஆனார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 37 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

இதனிடையே அடுத்து இணைந்த விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஜோடி வேகமாக ரன்களை குவிக்கத்தொடங்கினர். வெற்றிபெற கடைசி ஒவரில் 11 ரன்கள் தேவைப்பட்டநிலையில் விராட் கோலி முதல் பந்தில் சிக்சர் அடித்தநிலையில், (47 பந்துகளில் 63 ரன்கள்) அடுத்த பந்தில் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திகுடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா பவுண்டரி அடித்து அணியை வெற்றிபெற செய்தார்.

இறுதியில் தினேஷ் கார்த்திக் 1 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 25 (16) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 19.5 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் அதிகபட்சமாக டேனியல் சாம்ஸ் 2 விக்கெட்டுகளும், ஹேசில் வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.


Next Story