தூரந்த் கோப்பை கால்பந்து: சென்னை அணி கால்இறுதிக்கு முன்னேற்றம்


தூரந்த் கோப்பை கால்பந்து: சென்னை அணி கால்இறுதிக்கு முன்னேற்றம்
x

‘சி’ பிரிவில் சென்னை அணி 7 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து கால்இறுதியை உறுதி செய்தது.

131-வது தூரந்த் கோப்பை கால்பந்து போட்டி கொல்கத்தா, கவுகாத்தி, இம்பால் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 'சி' பிரிவில் இம்பாலில் நேற்று நடந்த கடைசி லீக்கில் சென்னையின் எப்.சி. 2-0 என்ற கோல் கணக்கில் உள்ளூர் அணியான நெரோகா எப்.சி.யை வீழ்த்தி அசத்தியது. சென்னை அணியில் அனிருத் தபா, வபா ஹகாமனேஷி கோல் போட்டனர். இந்த வெற்றியின் மூலம் 'சி' பிரிவில் சென்னை அணி 7 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து கால்இறுதியை உறுதி செய்தது. ஏற்கனவே இந்த பிரிவில் ஐதராபாத் (9 புள்ளி) கால்இறுதிக்கு முன்னேறி இருந்தது.

'பி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ராஜஸ்தான் யுனைடெட் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியன் நேவியை சாய்த்தது. 'பி' பிரிவில் மும்பை சிட்டி, ராஜஸ்தான், ஏ.டி.கே. மோகன் பகான் ஆகிய அணிகள் தலா 7 புள்ளிகளுடன் சமநிலை வகித்தன. இருப்பினும் கோல் வித்தியாசம் அடிப்படையில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் கால்இறுதி வாய்ப்பை தட்டிச் சென்றன. மோகன் பகான் பரிதாபமாக வெளியேற்றப்பட்டது. சென்னை அணி கால்இறுதியில் மும்பை சிட்டியை எதிர்கொள்கிறது.


Next Story